இந்த சிறுகதைத் தொகுப்பில் மூன்று கதைகள் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது இன்னும் இருக்குமென்றேத் தோன்றுகிறது .ஒரு விஷயத்தை புரியவைப்பதற்கும் உணரவைப்பதற்குமான மெல்லிய வேறுபாட்டை "சாமியார் சூவுக்கு " போகிறார் மூலம் அழகாக உணர்த்தியிருப்பார் . பிரச்சார தொணி ஒரு எழுத்தில் கூட வெளிப்பட்டிருக்காது . உயிர்கள் சார்ந்த கோட்பாடுகளை நமது வசதிக்கு எப்படி வளைத்து வைத்திருக்கிறோம் என்பதை சுட்டிச் சென்றிருப்பார். அது தவறு! சரி! என்ற முடிவுகள் அற்று இப்படி ஒன்று நமக்குத் தெரியாமலோ தெரிந்தோ நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம் என்று சிறு வெளிச்சத்தைக் காட்டிச் சென்றிருப்பார்.
““அலசல்” கதையின் களமும் கதாபாத்திரங்களும் நம்மை மிரட்சியடையச் செய்கின்றன. உடல் விற்று குடும்பம் காக்கும் தாயின் மகன்கள் அவளைப்பற்றி பல்வேறு கோணங்களில் அலசும் சம்பாஷணைகளின் தொகுப்பு . பலதரப்பட்ட கோணங்களில் அறிவார்ந்து அலசும் அவர்கள் . அவளுக்கும் மனமுண்டு என்ற ஒரு கோணத்தை தவறவிடுவதை இறுதியில் உணர்கின்றனர். கற்பு உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? என்ற விவாதத்தை எல்லா படைப்பாளிகளும் தொடுவதுண்டு அப்படி இவர் பாணியில் ஒரு படைப்பு "அலசல் " .
அவருடைய அனேக ஆக்கங்கள் சமூகம் , தனி மனித வாழ்வு சார்ந்த தத்துவார்த்த விவாதத்துக்குள் நம்மை இட்டுச் செல்பவை.அவரது படைப்புகள் நம்மை நிலைக்கொள்ளா விடாமல் செய்பவை . அவருடைய படைப்பில் வரும் மையக் கதாபாத்திரங்கள் வாசகனை சாட்சியாக வைத்துக்கொண்டு பெரும்பாலும் தன்னுள் பெரும் உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் . சற்று யோசித்தால் நிஜ வாழ்வில் அவருள் ஒரு பெரும் விவாதம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்திருக்கிறது . அவற்றை சொற் கோட்டைகளாக்கி வைத்துவிட்டு சென்றிருக்கிறார். அவருடைய எழுத்துலகில் பிரவேசிக்கையில் அந்த சொற்கோட்டை வாசகனின் மனப்பரப்பில் அதே கேள்வி விதைகைளை பரவவிட்டு புது தத்துவார்த்த விளைச்சல்களை கோரி நிற்கிறது . இடைவெளி குறுநாவலுக்கு பிறகு வாசித்த இந்த சிறுகதைத்தொகுப்பு அதை உறுதிப்படுத்தியது.
சம்பத் சிறுகதைகள் - தொகுதி -1 விருட்சம் வெளியீடு
No comments:
Post a Comment