கம்பனின் கவித்திறன் பற்றி பலர் பேசி கேட்டதுண்டேத் தவிற நேரடியாக சுகித்ததில்லை . பாடல்கள் படித்து பொருள் தேடுவது சுவாரஸ்யமற்றதாக தோன்றுவதுண்டு .சமீபத்தில் சுந்தரக்காண்டம் உரைநடை வடிவில் வாசிக்க நேர்ந்தது . பக்கங்கள் நகர அவர் எவ்வளவு பெரிய கதைச்சொல்லி என்பது விளங்கியது . கதைக்குள் கதை , முன்கதை சுருக்கம் என்று திரைக்கதை ஆசிரியர்களுக்கான தீனி நிறைய விரவிக்கிடக்கிறது.
கதை கேட்பவனாய் நமக்குள் எழும் வினாக்களுக்கு அடுத்த அடுத்த பத்திகளில் நிறைவான விடைகளை விட்டு செல்கிறார் . ஒரே சமயத்தில் சொல்பவனாகவும் கேட்பவனாகவும் மாறி மாறி பாவித்து எழுதியிருப்பார் போல. நீர்த்த உரைநடை வடிவாக வாசித்த போதும் பல இடங்களில் அவரின் கவித்துவம் அதன் ஆன்மாவை இழக்காமல் அப்படியே நின்றது ஆச்சர்யமாக இருந்தது.குறைந்தபட்சம் சுந்தரக்காண்டத்தை மட்டுமாவது அவர் மொழியில் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிச்சென்றது .