பெருந்திரு தந்த பெரும் "திரு" - லா .ச .ரா (30.10.1916 – 30.10.2007)
ஒரு வனாந்திரமான பகுதி “கற்பாந்திரமான” காடு என்கிறார் , மனித நடமாட்டமே நிகழாத ஒரு பகுதி . பின் சில மனித நடமாட்டம் ஏற்படுகிறது ஒரு சாலை உருவாகிறது அழிகிறது ஒரு ரயில் பாதை உருவாகி உருகுலைகிறது .அப்பகுதி மீண்டும் அரவமற்ற மேடாகிறது ,பின் ஒரு குட்டை உருவாகிறது. கால ஓட்டத்தில் அதுவும் காணாமல் போகிறது . அங்கு விசித்திரமாய் ஒரு கல் மட்டும் பார்த்தவுடன் பட் என கண்ணில் படுகிறது . ஒரு சுனை உருவாகி குறு ஓடையாய் ஓடுகிறது . மீண்டும் சில மனித நடமாட்டம் நிகழ தொடங்குகிறது .யார் யாரோ வருகிறார்கள் அந்த கல் சாட்சியாய் அவர்கள் வாழ்வின் சில பகுதிகளை பேசிச் செல்கிறார்கள் . நம்மால் அந்த மனிதர்களின் வாழ்வின் முழுப்பகுதியை யூகிக்க முடிகிறது . கல்லாய் நாம் இருக்கிறோம் . அதாவது அசைவுறாத ஒரு கேமரா. பாத்திரங்கள் வந்து சில விஷயங்களை பேசி செல்கின்றன . இதை ஒரு சிறு கதை என்று சொன்னாலும் அதில் பல குறுங்கதைகள் விரிகின்றன அக்கதைகள் நம் கற்பனை சிறகை எங்கோ விரித்து செல்கிறது. இப்படி ஒரு சிறுகதையை படமாக எடுக்க எவ்வளவு செலவு பிடிக்கும் ! ஒரு 500 ஆண்டு நிகழ்வுகளை காட்சிப்படிமமாக உருவகப்படுத்த நிச்சயம் ஒரு பிரம்மாண்ட செலவு தேவைப்படும் . அந்த மனிதன் வெறும் காகித பக்கங்களும் சில துளி மையையும் வைத்து . அந்த காட்சி ஊடகம் என்ன உணர்வை நமக்கு உண்டாக்குமோ அதே உணர்வை ஏற்படுத்திவிட்டார் . “யோகம் “என்ற அந்த சிறுகதை என்னைப்பொறுத்தவரை அவரின் மாஸ்டர் பீஸ் .
அனேக வாசகர்களைப்போல் அபிதாதான் எனக்கும் அவருக்குமான வாசிப்பு தொடர்பை ஏற்படுத்தினாள். அந்த மொழிநடையே இவர் சற்று வேறுமாதிரி என்று ஆரம்பத்திலேயே கட்டியம் சொன்னது. சில பத்திகளை ஒன்றுக்கு இரண்டுமுறை வாசிக்க நேர்ந்தது . ஒரு மாய மனிதனின் எழுத்து வலையில் சிக்குண்ட சிலந்தியாய் என்னையே உருவாக்கப்படுத்திக்கொள்ள தோன்றியது . அந்த நாவலின் முடிவுக்கு முந்தய 30 பக்கங்கள் நம்மால் ஆஸ்வாதமாக இருக்கமுடியாது . இப்படி ஒரு விஷயத்தை தொட்டு விட்டாரே , இவ்வளவு சிக்கலான முடிச்சுகளை பின்னிவிட்டாரே ! எப்படி அவிழ்க்கப்போகிறார் என்ற பதட்டம் தீயென பரவிக்கொண்டிருந்தது. இறுதியில் சொடக்கிடும் நேரத்தில் மந்திரவாதி அனைத்து முடிச்சுகளையும் உடைப்பதுபோல் உடைத்து அவர் வென்றார் . ஒரு இயக்குனரிடமோ & எழுத்தாளரிடமோ பார்வையாளனாக வாசகனாக நாம் தோற்கும் இடங்கள் சுவாரஸ்யமானவை. இவரிடம் பலமுறை தோல்வியுற்றிருக்கிறேன் வாசகனாக.
எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் அந்த வித்யாகர்வம் அற்ற ஒரு எழுத்தாளர் . "எங்கிருந்தோ எவருக்கோ சேரவேண்டிய எழுத்துக்கள் என் மூலம் தன்னை எழுதிக்கொண்டுள்ளன , எப்படி அதற்கு நான் பாத்யதை ஆகமுடியும்" என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது .நமக்கு பெரும் கோவில் கட்டுமானத்தை பார்த்து வரும் அதே ப்ரமிப்பு , சிறு யாளியின் பிடரி வளைவின் நுணுக்கத்தை பார்த்தும் வருமல்லவா அதுபோல இந்த மனிதரின் எழுத்தில் ஒரு பத்தி அல்ல ஒரு வார்த்தையே போதும் நம்மை ப்ரமிப்பில் ஆழ்த்த. ஒரே வார்த்தையில் இரண்டு மூன்று நாட்கள் நம்மை உழல விட்டுவிடுவார் . இவர் எழுத்தின் வீரியத்தை பற்றி யோசிக்கும் பொது அந்த ரசவாதம் அவருக்கு எப்படி சாத்தியமாகியது என்பதை ஆராய, அவர் பணத்துக்காக புகழுக்காக எழுதவில்லை என்பதும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது . எந்தவித வரைவிற்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் அவருக்கு தோன்றும் பொழுது தோன்றியவற்றை எழுதியிருக்கிறார் . உதாரணத்துக்கு ஒரு சம்பவம் ஐம்பூதங்களை பற்றி ஒவ்வொன்றுக்கும் ஒரு கதையென ஐந்து கதைகளை எழுத துவங்கியிருக்கிறார் , நான்கு வந்துவிட்டது ஒரு கதை வரவில்லை அதற்காக 7 ஆண்டுகள் காத்திருந்து பின் ஒரு நாள் அது முகிழ்ந்ததும் எழுதியிருக்கிறார் . இது சிலருக்கு பைத்தியக்காரத்தனமாகப்படலாம் , என்னைப்பொறுத்தவரை இதுதான் அவரின் எழுத்தின் வன்மைக்கு காரணம் .
நூறு ஆண்டுகளுக்கு முன் இதே தினம் அந்த ரஸவாதி பிறந்தியிருக்கிறார். இந்த நூற்றாண்டு தினத்தில் லால்குடியின் திசை பார்த்து வாசகனாக வணங்குகிறேன் . என்னுடைய அனுமானத்தில் அவர் அந்த அம்மன் பலகையில் அல்லது பெருந்திருவின் அபயமுத்திரையில் ஐக்கியமாகியிருப்பார். இந்த நூற்றாண்டு தினத்தில் அவரின் எதாவது ஒரு புத்தகத்தை வாசிக்க தொடங்குவோம் . அவரை வாசிப்பில் கொண்டாடுவோம் .
