Thursday, 27 October 2016

இறுதிப்பயண இனிமை



நேர்த்தி

தாழம்புதர்களுக்கிடையே  புனையலாடும் புதுப்பாம்புகளைப்போல்.
நேர்த்தியாய் பிணைந்திருக்கும் பின்னல்,
பிதற்றுகிறது அவள் அன்னையின் விலாசத்தை .

                                                                                                                 18.10.16


இறுதிப்பயண இனிமை 

ஐப்பசியின் அதிகாலைக்காற்று முகம் வருட,
கதிரின் மென்தீண்டலும் மெலிதாய்ப்படர ,
சாலையோர வாகை மரங்கள் ,தூரத்து வீடுகள்,
கழனியில் கதிரறுப்போர் - மட்டுமின்றி ,
கீழே பூமியும்கூட அதிவேகத்தில்
நகர்ந்துக் கொண்டிருப்பதாய்படும்.
டிவிஎஸ் -50 ல் சுமக்கப்படும் குறும்பாட்டிற்கு .
எல்லாம் சற்று நேரத்தில் நின்றுவிடும் - என்ற
நிதர்சனத்தை யாரும் சொல்லிவிடாதீர் !
பயணம் ருசிக்கட்டும் சில நாழிகைகள்.
                                                                                                                     27.10.16


Sunday, 23 October 2016

Thoovanathumbikal [1987] Malayalam - Padmarajan



படைப்புகள் ஊடே சமூகம் அல்லது தனிமனிதனுக்கான கருத்துக்களை சொல்லும்பொழுது, குறிப்பாக சத்தமாக சொல்லும்போது நம்மால் அவர்கள் சொல்ல முனையும் கருத்தை புரிந்துகொள்ளமுடிகிற அளவுக்கு உணர்ந்துகொள்ள முடிவதில்லை , அந்த சப்தம் உணர்ந்துகொள்வதற்கு தடையாகவே இருக்கிறது . அப்படி சப்தமாக கருத்துக்கள் சொல்லும் படைப்புகள் சரியான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தால் மீண்டும் மீண்டும் அதுபோன்ற படைப்புகளுக்கு தேவையே இருந்திருக்காது .சில படைப்புகள் இந்த உணரவைக்கும் நுணுக்கத்தை சரியானமுறையில் கையாளுகின்றன . அப்படி கையாளப்பட்ட படைப்புகள் படைப்பிற்கு பின் நம்முள் ஏதோ ஒரு விவாதத்தை துவக்கிவிடுகின்றன . அது நம்முள் ஒரு தெளிவிற்கான வெளிச்சத்தை பாய்ச்சி விடுகிறது. சமீபத்தில் அப்படி காணக்கிடைத்த ஒரு படைப்பு "தூவானத்தும்பிகள்". 

மேலோட்டமாக பார்த்தால் ஒரு காதல் கதை என்று தோன்றினாலும் . கற்பு , காதல் , தனிமனித அறம் சார்ந்து சில விவாதங்களை நம்முள் ஏற்படுத்திவிட்டு செல்கிறது இந்த படம் . கிளாரா ,ராதை மற்றும் ஜெயகிருஷ்ணன் இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் படைப்பும் அவ்வளவு நேர்த்தி , குறிப்பாக மோகன்லாலின் கதாபாத்திரம் அவ்வளவு செழுமை.. . ஜெயகிருஷ்ணன் கதாபாத்திரம் அந்த நகரத்தில் எதையும் செய்வதற்கான திறன் நிறைந்த மனிதன் அதை வெளிப்படுத்திக்கொள்வதில்லை. . பல பெண்களுடன் பழகியிருந்தாலும் புழங்கியதில்லை .காமம் என்பது அவனுக்கு மலிவாகக்கிடைக்ககூடியதே என்றாலும் அதிலிருந்து விலகியே நிற்கிறான் . அப்படிபட்ட ஒரு மனிதன் உறவு என்று வரும்பொழுது அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் சிலிர்க்கவைக்கிறது . கிளாரா பற்றி ராதையிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவதும் . எதிர்பாராமல் நிகழும் இரண்டாம் சந்திப்பையும் அவளிடம் மறைக்காததும் . சரி இனி ஒரு முறைக்கூட அவளை சந்திக்கக்கூடாது என்று கசியும் ராதையை தேற்றும் அவன் . மூன்றாவது சந்திப்பிற்க்கான தந்தி கிடைத்த அடுத்த காட்சியிலேயே ராதையிடம் செல்வதிலிருந்து அவன் அந்த உறவில் எவ்வளவு நேர்மையை காக்கிறான் என்பதை உணர்த்துகிறான் . அதே வேளையில் அதிலிருந்து பிறழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதே நிதர்சனம் என்பதையும் புரிந்தவனாகவே இருக்கிறான் .அந்த புரிதல் கிளாராவிடமும் இருந்திருக்கிறது என்பதை அவன் மட்டுமல்ல நாமும் எதிர்பாராதது .

செம : ஒரு கிளாசிக் படத்தில் மாஸ் சீன் காணக்கிடைப்பது அரிது இந்தப்படத்தில் வரும் "நாரங்கா வெள்ளம் " குடிக்க செல்லும் காட்சி அப்படிப்பட்டது. அந்த காட்சிக்கு முன் நாம் ஜெயகிரிஷ்ணனை பார்த்த விதமும் அதற்கு பின் பார்க்கும் விதமும் நேர் எதிரானது.

பெயருக்காகவே பார்க்கலாம் : Padmarajan , Mohanlal