Saturday, 15 August 2020

எல்லைகாந்தி

 

சுதந்திர போராட்ட காலகட்ட புகைப்படங்களில் காந்தி இருக்கும் அனேக படங்களில் ஆஜானுபாகுவான ஒரு மனிதரின் இருப்பை கவனித்திருக்கலாம் . சுதந்திரம் கொடுக்கப்பட்டபோது அது பலருக்கும் ஒரு வித ஆசுவாசத்தை கொடுத்தது, இதுநாள் வரை உழன்றது இதற்குத்தானே என்றனர் . இருந்தும் சிலர் தாங்கள் விரும்பியது இதுபோன்ற பிரிவினையுடன் கூடிய ஒன்று அல்ல என்று வெதும்பினார் அதை வெளிப்படையாக சொன்னவர்களில் முக்கியமானவர்கள் இருவர் ஒருவர் காந்தி மற்றவர் அந்த ஆஜானுபாகுவான மனிதர் எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட அப்துல் கபார் கான். முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று சிலரால் தூற்றப்பட்டார். காந்தி சில மாதங்களில் கொலைசெய்யப்பட்டார் . ஆனால் கான் பின் 40 ஆண்டுகாலம் எல்லா கொடுமைகளையும் கண்ணுற வேண்டி இருந்தது.சுதந்திரத்திற்கு பின்னும் அவர் வாழ்வு மாறவில்லை .


பஃதுன் இனக்குழுக்காக ஆங்கிலேயரை எதிர்க்கத்துவங்கிய கான் பின் ஒன்றுபட்ட இந்தியாவிற்காக காந்திவழி நின்றார். சுதந்திரத்துக்கு பின் பாகிஸ்தானில் எதிர்க்கட்சியை நிறுவி ஒருமைப்பாட்டை முன்னிறுத்த முயன்றார் . இவரின் இருப்பு எப்போதும் தங்களின் முன்னெடுப்புகளுக்கு தடைதான் என்றுணர்ந்த ஜின்னாவின் அரசு அவரை வீட்டுக்காவலில் இருத்தியது .ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேச எதற்கும் அவர் மசியவில்லை கொண்ட கொள்கையில் நின்றார் . பின் வந்த எல்லா ஆட்சியாளர்களும் இவரை சிறை , வீட்டுக்காவல் என்று மாறி மாறி அலைக்கழித்தனர்.


இந்திய அரசு அவரை தங்களின் பொக்கிஷமாக கருதியது . காந்தியின் நூற்றாண்டு விழாவிற்கு தலைமையேற்க கானை அழைத்து சிறப்புற நடத்தியது (இத்தனை இன்னல்களுக்கு பிறகு பாகிஸ்தானிலிருந்து விமானத்தில் ஒரு துணிப் பொதியுடன் வந்திருக்கும் கானின் புகைப்படம் பார்க்க நெகிழ்சியாக இருக்கும் , பிரதமர் இந்திரா விமானநிலையம் சென்று வரவேற்பு கொடுப்பார் ). இறுதிக்காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனபோது இந்தியாவிற்கு அழைத்து அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்தது அரசு . அப்போதைய பிரதமர் ராஜீவ் நேரில் சென்று நலம் விசாரித்தார் . கடைசி வரை கானை இந்தியாவின் ஆளாகவே பாகிஸ்தான் பார்த்தது.தன் வாழ்நாளில் 37 வருடங்கள் சிறையில் கழித்து கடைசியாக தனது 97 வது வயதில் 1988ல் இந்த உலகை விட்டு சென்றார் கான் . இந்திய அரசு ஐந்து நாட்கள் துக்கம் அனுசரித்து மரியாதை செலுத்தியது . சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் என மொத்த வாழ்வையும் மக்களுக்காக கொடுத்து எந்தவித சலுகைகளையும் அனுபவிக்காமல் சென்றவரை இன்று நினைவுகூர்வோம்.

Monday, 27 July 2020

பஷீரின் பரிவர்த்தனை

 

சம்பவம் - 1

கைவிலங்கிட்ட ஆஜானுபாகுவான மனிதனை காவலர்கள் இழுத்து செல்கின்றனர்.பல நாள் அகப்படாமல் இருந்த பெரிய திருடன் ஒருவழியாக சிக்கினான் என்று மக்களின்  முணு முணுப்பு காதில் விழுகிறது  . கூட்டத்தில் நின்ற பஷீர் அந்த முகத்தை பார்க்கிறார். இவரை அவன் பார்த்துவிட மாட்டானா ! ஒரு முகமன் செய்துவிடமாட்டோமா என்று நிற்க . அவன் பார்வை நேராக சாலையை நோக்கியே இருக்கிறது . முன்பொருநாள் காரிருள் அகன்று சிறு ஒளி பரவியதொரு தருணத்தில் கருணை மிகு கண்கள் கொண்ட முகத்தை  காண்டார் பஷீர்   . தன் முகத்தில் விசிறிய நீரினால் மயக்கம் தெளிய கையில் தேநீர் குவளையை இருத்தி கொஞ்சம் குடியுங்கள் என்றார் அந்த முகமறியாத  மனிதர் . உணவு வாங்கிக்  கொடுத்து உண்ணுங்கள் என்றார் .அன்று  கோரப்பசியுடைய  நாயைப்போல உண்டதாக பஷீர் குறிப்பிடுகிறார்   . இயல்புக்கு வந்ததாய் உணர கையில் ஒரு பொட்டணத்தை திணித்து விட்டு பார்த்து போங்கள் என்றவாரே  அவர்   சென்றார்   . பிரித்து பார்க்க ஒரு வாரத்துக்கு தேவையான பணம் அதில் இருந்தது . அவர் பெயரை கேட்க வில்லையே என்று எத்தனிக்க . அவ்விடத்திலிருந்து மறைந்து போயிருந்தார் . அதற்கு பின்  அந்த முகத்தை இன்றுதான் பார்க்கிறார் பஷீர் . கேலியும் கோபமும் கமழ்ந்து கிடந்த அந்த கூட்டத்தில் நன்றியும் கருணையும் ஒருசேர ஒரு முகம் அந்த திருடனை பார்த்துக்கொண்டிருந்தது ஆனால் அவன் பார்க்கவில்லை .

சம்பவம் - 2

வடஇந்தியாவின் மலைப்பகுதி அது . மாலையில்  ஒரு விடுதிக்கு உணவருந்த செல்கிறார் பஷீர். உணவருந்திய பின் முக்கால் ரூபாய் பில் வருகிறது எழுந்து ஜோப்பில் கைவிட்டவருக்கு அதிர்ச்சி , எடுத்து வந்த பர்ஸை காணும் . கடைக்காரிடம் விவரம் சொல்கிறார். அவன் இவரை இயலானமாக பார்க்கிறான்  பெரும் ஏமாற்றுக்காரனை அணுகும் தொனியில் மிரட்டுகிறான் . போட்டிருக்கும் உடுப்புகளை கழட்டி வை என்று ஆதட்டுகிறான் . கூனி குறுகி போகிறார். மேலாடையை கழட்டி மேசையில் வைக்க. டவுஸரையும் கழட்டடா எனும் குரல் இவரை நடுங்கச்  செய்கிறது. இறுதியில் வேறு வழியில்லை என்று கழற்ற முற்படுகையில். நிறுத்துங்க சார் என்று ஒரு குரல் ! வேகமாய் வந்த ஒருவன் பில் தொகையை எண்ணி வைத்துவிட்டு. உடுப்பை எடுத்து கொடுத்து போட்டுக்கங்க சார்! என்கிறான். இதுநாள் வரை செய்த நல்வினைகள் ஒன்றாய் வந்து காத்ததாக அவருக்கு தோன்றுகிறது . அவனுடன் வெளியேறுகிறார். அந்த விடுதியில் உணவருந்திக்கொண்டிருந்த அனேகர் எப்போது இவன் நிர்வாணமாவான் என்றிருந்ததாய் தோன்றியது அவருக்கு   .நன்றிப்பா என்கிறார் பஷீர். அசலூர் வந்தா கவனமா இருக்க மாட்டிங்களா  என்றவாறே அவனிடமிருந்த நான்கைந்து பர்ஸ்களை எடுத்துக்காட்டி இதுல எது உங்களோடது என்கிறான் . அவருடையதை எடுத்துக்கொள்கிறார். பார்த்து போங்க என்றவாறே செல்கிறான்  அவன் . பெயரை கேட்க மறந்துவிட்டோமே என்று எத்தனிக்கையில் அவன் இருளில் மறைந்து போயிருந்தான் .

இந்த இரண்டு சம்பவங்களில் ஒன்று அவர் வாழ்வில் நடந்தது மற்றது அதைக்கொண்டு அவர் உருவாக்கிய  புனைவு . எப்படி ஒரு நிகழ்வின் ஆன்மாவை ஒரு புனைவில் இருத்தியுள்ளார் என்பது நம்மை மிரட்சியடைய செய்கிறது .


Thursday, 25 June 2020

எளிய கலைஞன்


 சுதந்திர இந்தியாவின் புதிய திட்டமிட்ட நகரை உலகின் முன்னணி கட்டடவியாளரை வைத்து நிர்மாணிக்க வேண்டுமென நேரு விரும்பினார் . அதன்படி செய்தார் அந்த முன்னணி படைப்பாளி ஆகச்சிறந்த திட்டமிட்ட நகரமைப்பை உருவாக்கினார் . இருந்தும் அது பயன்பாட்டுக்கு வந்த போது  மக்களால் அதனுடன் ஒன்ற முடியவில்லை . காரணம் அந்த அமைப்பே முற்றாக மேற்குலக கலாச்சாரத்துடன் இருந்தது . குடியிருப்புகள் ஒரு பகுதி தனியே  , வணிக , அலுவலக பகுதிகள் தனி தனியே என . ஒரு தலைவலி மாத்திரை வாங்க 4 கிமி தூரம் சென்று திரும்ப வேண்டிய நிலை  . அழகியல் அமைப்பு என்று எல்லாம் இருந்தும் உபயோகிக்கப்போகும் மக்களுக்கு அந்நியமாக நின்றது அது . இப்படி சில அடிப்படைகளை நாம் கவனிக்கத்தவறுவோம் என்றார்  கல்லூரி இரண்டாமாண்டில் பாடமெடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர் . அப்படி மனித மனத்தை கவனித்து நிர்மாணிக்கப்பட்ட ஒரு படைப்பை எடுத்துக்காட்டி அதை நிர்மாணித்த பி.வி.தோஷி பற்றி பேசினார். முதன் முதலில் அவர் பெயரை கேள்விப்பட்டது அப்போதுதான்.அன்று அவரைப்பற்றி  கேட்ட விஷயங்கள் அந்த மாணவ மனதில் அவரை ஆதர்சனமாக்கியது .

ஆரண்யா என்ற அந்த குடியிருப்பை எளிய மக்களுக்காக வடிவமைத்தவர் , அதன் தெருக்களின் முனைகளில் பெட்டி கடைகளுக்கும் டீ கடைகளுக்கும் தனி இடங்களை  ஒதுக்கி வைத்தார் . வீடுகளின் புழக்கடைகளை  முற்றம் போன்று அமைத்தார் மக்கள் அமர்ந்து கதைக்க . அங்கு குடியேறிய மக்களுக்கு அவர்களின் வாழ்வியலில் சிறு கீறல் கொடுக்காத ஒரு வசிப்பிடம் கிடைத்தது .அவரது படைப்புகளில் இன்றும் பேர் சொல்லும் படைப்பு அது.

 "எப்படி சமைக்க வேண்டுமென நான் கத்து கொடுத்துட்டேன் எதற்காக சமைக்க வேண்டுமென நீ கத்து கொடு " என்று உஸ்தாத் ஓட்டல் கரீம் க்கா ஒரு சீட்டை கொடுப்பார் . அதுபோல மேற்குலக ஜாம்பாவான்களிடம் சிஷ்யராய் நின்று வித்தை கற்றுக்கொண்டார் பின் அதை பிரயோகிக்கும்போது இந்திய மனித மனதை மனதில் கொண்டே படைப்புகளை நிகழ்த்தினார். இந்தியாவில்   கட்டடக்கலை ஜாம்பவான்களில் இன்றும் இவரை முன்னணியில் வைப்பது வாழ்விலும் படைப்பிலும்  அவர் காட்டும் அந்த  எளிமைதான். 

     அகமதாபாத்தில்  அவர் துவங்கி வைத்த ஒரு கட்டிடக்கலையியல் கல்லுரி  பல்கலைக்கழகமாகி உன்னதமான படைப்பாளிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது . இன்றும் அங்கு சென்று மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார் .  Pritzker prize- என்பது ஒருவிதத்தில் நோபல் பரிசுக்கு இணைதான்  ஆண்டுக்கு ஒருவருக்கு மட்டுமே என  கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது அதை வாங்கும் முதல் இந்தியர் என்ற பெருமையுடன்  இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றார்  

Sunday, 26 April 2020

Ugetsu - 1953 - Kenji Mizoguchi



சுனங்காமல் பார்வையாளனை  தொடர்ந்து படத்தோடு இருத்தி வைத்துக்கொண்துதான்  ஆச்சரியப்படுத்தியது . 70 வருடத்துக்கு முந்தைய  கருப்புவெள்ளை படம் இன்னும் உயிர்ப்போடு  இருக்கிறது . அவர்கள் நாட்டில்  புழங்கிய எளிய  கதைதான் என்றாலும் எங்கு தொடங்கினார்  நடுவில் என்னென்ன நாகசுகள் காட்டி எப்படி முடித்தார் என்பதில் இயக்குனரின் தனித்தன்மை மினுங்கியது . 

போரை பற்றிய படம் என்றும் கொள்ளலாம் ஏனெனில்  படத்தில் போர் இல்லை,  போரின் சுவடுகளும் அது சாதாரணர்களிடம்  நிகழ்த்திவிட்டு போகும் வீச்சையும் நமக்கு உணர்த்துகிறது    , போரின் அழுத்தம் படம் நெடுக விரவிக்கிடந்தது  . மற்றோரு கோணத்தில் நிதர்சனத்தை உணரா  தனிமனித அபிலாஷைகள் எங்கே இட்டுச்செல்லும் என்றும் காட்டுகிறது படம் ,ஸ்திரமான கதையாடலும்  காட்சிகளின் கோர்வைகளும் வியக்கவைத்தன , தேயையற்ற காட்சி என்று ஒன்றை நம்மால் கைகாட்டிவிட முடியாது ,   .இவற்றை தாண்டி ஒரு ஆச்சர்யத்தை படத்தினுள் புதைத்து வைத்திருந்தார் இயக்குனர்  . அதற்கான எந்தவித முஸ்தீபுகளும் அவர் முன்கூட்டியே நமக்கு காட்டாதது பெரியதொரு திக்கின்பத்தைக் கொடுத்தது . ஜப்பானிய சினிமா வரலாற்றில் மிக முக்கியமானதொரு படமாக இன்றும் நிற்கிறது . 


Saturday, 11 April 2020

சாகசக்காரன் ......

 




Le Corbusier  கலையைப்  பற்றி பக்கம் பக்கமாக எழுதுவதற்கு / பேசுவதற்கு பதில் ஒரு சிறு கவிதையில் மொத்தமாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார் . கலைஞன் யார் ! ஏன் அவன் திரும்ப திரும்ப அந்த கலையை நோக்கி உந்தப்படுகிறான் ! என 

அந்த பெரிய வஸ்தாதுவின்  கவிதையையை தமிழ்படுத்தியதொரு  தருணம் .



சாகசக்காரன் ......

கழைக்கூத்தாடி  சதா சாவை ஸ்பரிசித்து  திரும்புகிறான் . .

யரோ ஆட்டுவிக்கும்  பொம்மையாயல்லாமல் ,

தன்னைத்தானே  நெகிழ்த்தி ஆட்டுவித்துக் கொள்கிறான் .

அடிகளையும் அங்ககீனங்களையும் அனுதினம் அனுமானித்தே

அம்பலத்தில்  இறங்குகிறான் அவன் .

என்றோ சிறிதாய் பிசகப்போகும்  நேர்த்தி தன் காலத்தை

சிதறடித்துவிட்டு போகுமென்பதை அறியாமலில்லை .

அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை ,நன்றி நவிழும்  நாவுமில்லை .

தன்னையே முற்றாக ஒப்புவித்து கழைக்கூத்தாடிகளின்  

மாய வெளியில் சுழல்வதில் மிஞ்சுவதென்ன ? -ஏனையோர்

எய்தாத அனுபவத்தை எளிதாய் கைக்கொள்ளும்  போதை !

                                ----தமிழில்  - பாலகுரு K 


(மகாகலைஞர்களின் படைப்புகளை பிரதியெடுத்தல் கூட சிரமமாக இருக்கிறது    )


An acrobat is no puppet,


He devotes his life to activities
in which, in perpetual danger of death,
he performs extraordinary movement of
infinite difficulty, with disciplined
exactitude and precision.....free
to break his neck and his bones and
be crushed.

Nobody asked him to do this.
Nobody owes him any thanks.
He lives in an extraordinary world, of the acrobat.
Result: most certainly!
He does things which others cannot.

                                      .................Le Corbusier 



நூற்றாண்டு கண்ட T.S. பாலையா




 சில ஆளுமைகளைப்பற்றி நம்மிடமிருக்கும் தரவுகளை வைத்து ஒரு பிம்பத்தை உருவாக்கிவைத்திருப்போம் . அது பலநேரம் நிதர்சனத்தில் உண்மையாய் இருப்பதில்லை. கிக்கிரி பிங்கிரி என கோமாளித்தனம் செய்யும் நகைச்சுவை நடிகர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த சந்திரபாபு , காளி N .ரத்தினம் போன்றவர்களின் உண்மையான ஆளுமை   பற்றி தெரிந்த போது விக்கித்து நிற்க வேண்டியிருந்தது . அந்த வரிசையில் இன்று வாசித்த `'நூற்றாண்டு கண்ட T.S. பாலையா `' புத்தகம் அவர் பற்றிய நிறைவானதொரு பிம்பத்தை கொடுத்து பிரமிக்க வைத்தது .

1.பாலையா ஒரு நல்ல குணச்சித்திர & நகைச்சுவை  நடிகர் , 2. அவர் சிவாஜி எம்ஜிர் காலத்திய நடிகர் . என்று இதுநாள் வரை நினைத்திருந்தது எவ்வளவு தவறு என்று புரியவைத்தது புத்தகம் . 1936 ல் திரைத்துறையில் நுழைந்தவர் 1950 ல் உச்சம் தோட்டிருக்கிறார் . அந்த காலகட்டத்தில் தொடர்ந்து  பாகவதர் , பியூ சின்னப்பா விற்கு  எதிராக  வில்லன் என்றால் பாலையாதான்  என்று நின்று களமடியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் எல்லிஸ் .டங்கன்  சதிலீலாவதி ,அம்பிகாபதி , மீரா என தன் படங்களில் பாலையாவை தொடர்ந்து   நடிக்க வைத்திருக்கிறார். இவரது திறமையை   இனங்கண்டு கொண்டதையும் தன் நடிப்புக்கு  உயிர் தண்ணீர் ஊற்றியதையும்  நன்றியுடன் நினைவு கூருகிறார் பாலையா  .

`பி எஸ் வீரப்பா & எம் `ஆர்`ராதா போன்றோர்களுக்கு முன்னோடி வில்லனாக துலங்கியவர் .செறிவான கதாபாத்திரங்கள் என்றால் கூப்பிடுங்கள் பாலையாவை என்ற நிலையில் இருந்திருக்கிறார் . உதாரணமாக அண்ணாவின் வேலைக்காரி நாடகம் படமாக்க பேச்சுவார்த்தை நடந்தபோது , இயக்குனரிடம் அண்ணா இரண்டு கேள்விகள் கேட்டிருக்கிறார் அதில் ஒன்று யாருக்கு முக்கிய எதிர்மறை கதாபாத்திரத்தை கொடுக்கப்போகிறீர்கள் என்பது ! "பாலையா" என்றதும் நிறைவாய் ஒப்புக்கொண்டுள்ளார்.ஆரம்பகாலங்களில் பாலையாவின் பெயருக்கு பின்னேதான்  எம்ஜிரின் பெயர் திரையில் தோன்றுமென்பதிலிருந்து அவரின் செல்வாக்கு நமக்கு புரிகிறது . இருவரும் ஒன்றாக  "சதிலீலாவதி "யில் அறிமுகமானவர்கள் , எம்ஜியார் முக்கியநட்சத்திரமாக 20 ஆண்டுகள் ஆனது .  பாலையாவுடன் இணைத்து நடிக்கையில் அவரே ரசிகர்களை ஆக்ரமிக்கிறார் என்று ஒரு கட்டத்தில் அவருடன் நடிப்பதையே தவித்திருக்கிறார் எம்ஜிஆர்  . 



பாலையாவின்  நடிப்பில் அடிப்படையிலேயே நகைச்சுவை தொனி உண்டென்பதை ஆரம்பகாலங்களில் சில வில்லன் கதாபாத்திரங்களில் பளிச்சிட செய்தவர் ,ஒரு கட்டத்தில் கொடூர வில்லனிலிருந்து  குணச்சித்திர நடிப்புக்கு நகர்ந்திருக்கிறார் அதற்கு தகுந்தாற்போல கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைந்திருக்கிறது பிற்காலத்தில் AP நாகராஜன்  ,ஸ்ரீதர்,  K .பாலசந்தர் போன்றோர் அவரின் மகோன்மதம் உணர்ந்து தங்கள் படைப்பில் பயன்படுத்தியுள்ளனர் .

காதலிக்க நேரமில்லையில் அந்த கதாபாத்திரத்திற்கு பாலையாதான் என்ற முடிவோடு பாலையாவை பார்க்க போகும் ஸ்ரீதரிடம் ரேஸ் ஆர்வமுள்ள பாலையா சனி ஞாயிறு படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்ற   விஷயம் சொல்லப்படுகிறது . கதையை சொல்லி ஒப்புகொள்ளவைத்துவிட்டு பாலையாவிடம் கேட்டேவிடுகிறார் . ஆமாப்பா உண்மைதான்  எனக்கு கிண்டில மனச வச்சிக்கிட்டு ஸ்டுடியோக்குள்ள நிக்கமுடியாதப்பா , என்னையும் ஏமாத்திகிட்டு எல்லாரையும் ஏமாத்திட்டு எதுக்கு . அதான் படப்பிடிப்புக்கு போறதில்லை என்கிறார் பாலையா .புரியுது இருந்தாலும்   இந்த படத்துக்கு நீங்க சனி ஞாயிறும் படப்பிடிப்புக்கு வரணும்.   உங்க கதாபாத்திரம்  படம் முழுதும் இருக்கு  . கொஞ்சம் யோசிச்சவர் . சரி வரேன் என்றவர் சொன்னபடி காலத்தால் அழியாத அந்த கதாபாத்திரத்தை நடித்து கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத  ஆரம்ப அத்தியாயமாக விளங்கியவர் .தனது 58 வயதில் மரணமடைந்தார் .  

Wednesday, 25 March 2020

The Seventh Seal -Ingmar Bergman - 1957

 



”செவென்த் சீல்” படத்தில் பிளேக் நோய் ஒவ்வொரு ஊராக பரவி அழிக்கும் , அதை எதிர் நோக்கியே பல கிராமங்கள் பயத்தில் அரை பிணமாக அலைந்து கொண்டிருக்கும் .படம் பார்த்த போது அந்த காலத்தில் அறிவியல் வளர்ச்சி இல்லாமல் எப்படி செத்திருக்கிறார்கள் என்று `’உச்` கொட்ட தோன்றியது. நாம் வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக நினைத்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் அந்த மனிதர்களின் மரணபய மனநிலைக்கு நம்மை இட்டு சென்றுள்ளது கோரோனா .

கதையின் மைய பாத்திரத்திடம் மரணதேவன் செஸ் விளையாடுவான் . மரணதேவன் வென்றால் நாயகன் மரணிக்க வேண்டும் . அந்த விளையாட்டை தன் சாதூரியத்தால் தொடர்ந்து கொண்டே இருப்பான் நாயகன் . இந்த விளையாட்டு ஒருநாள் முடியும் , அது நிச்சயம் அவனது தோல்வியாகத்தான் இருக்கும் என்று உணர்ந்தும் தொடர்ந்து கொண்டிருப்பான். அதே நேரம் சாவுக்கு பின் என்ன என்ற கேள்விக்கு விடையை நோக்கி செல்வான் . சாவின் விளிம்பில் நிற்கும் சிலரை சந்தித்து கேள்விகள் கேட்பான் . இறுதியாக தான் தோல்வியடைவதற்கு முன் ஒரு அறமான காரியத்தை செய்துவிட்டு மரணதேவனிடம் தோற்பான் .நம்முள் தத்துவ விசாரணைக்கான பொறியினை கொடுக்கக்கூடிய படைப்பு . படத்தை மீள் பார்வைக்கு உட்படுத்த ஏதுவான காலகட்டம் இது . அதே போல சாவைப்பற்றி பெரும் தத்துவ விசாரம் செய்த சம்பத்தின் இடைவெளியும் இந்த தருணத்தில் வாசிப்புக்கு உட்படுத்தலாம்.