Friday, 2 September 2016

Locke [2013] - Steven Knight



குறைந்த கதாப்பாத்திரங்கள் நிறைந்த படங்களை தேடிப்பார்த்துக்கொண்டிருந்த பொழுது சிக்கிய படம் இது .கட்டுமான நிறுவனமொன்றில்  பணிபுரியும் நாயகன் .அடுத்தநாள் நாட்டிலேயே பெரிய கட்டுமான நிகழ்வு ஒன்றை முன்னின்று நிகழ்த்தவேண்டும் . ஆயத்தப்பணியில் இருப்பவனுக்கு மருத்துவமனையியிலிருந்து அவசர அழைப்பு .பிரசவத்தை எதிர்கொள்ளும் தோழிக்கு உறுதுணையாய் இருக்க வேண்டுமென்று . அவன் தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கியமான ஒரு அத்யாயம் அது என்பதால் . நாளைய வேலை நாளைக்கு என்று காரில் அந்த நகருக்கு பயணப்படுகிறான் .

போகும் வழியில் அவன் தொழிற்சாலையின் தலைவர் , இவனுக்கு கீழ் பணிபுரியும் ஊழியன் , அந்த நகர நிர்வாக தலைவர் , மனைவி ,குழந்தைகள் , தோழி , மருத்துவர் என்று ஒரு பத்துக்கும் மேற்பட்டோரோடு தொலைப்பேசியில் பேசுகிறான். அந்த 70 நிமிடங்கள் அவன் பேசும் பேச்சின் ஊடே அவன் யார் என்பதும் அவன் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது நமக்கு  .

90 நிமிடங்களும் வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் நாயகன் மட்டுமே திரையில் தோன்றுகிறார் . பார்வையாளருக்கு சோர்வை ஏற்படுத்த அனேக வாய்ப்புள்ள இப்படி ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அசத்தியிருக்கிறார் இயக்குனர் . Tom Hardy என்ற நடிப்பு ராட்சசன் இல்லையென்றால் அது சாத்தியமாகி இருக்காது . அதிகமாக ஸ்பேஸ் பாரை தட்டி தட்டி பார்த்தப்படங்களில் இதுவும் ஒன்று , வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஆழமானவை.

Monday, 29 August 2016



பாசாங்கு

மயில்கொன்றை நகங்கள் சூடி ,
மாறுகண் மாற்றி, நா துருத்தி,
மறைந்திருந்து எதிர்ப்பட்டு பயம் காட்டுகையில்.
மயிர்க்கூச்செரிய பயந்ததாய் பாசாங்கு செய்கிறேன் .
பின் நீ வெடித்து சிதறவிடப்போகும் சிரிப்பிற்காக.

2016 AUGEST 8 


 " சுள் "தான் .சுளீரில்லை

அதிரம்சாயா, சமோசா, லேசூ .......
நாசி நகர்த்தும் நறுமணத்துடன் கனைப்பு,
படுக்கையை படரவிடும் பாட்டியின் பெருமூச்சு ,
எக்மோர் எப்போ போயி சேரும் ?
மின்விசிறியை விசைப்படுத்துங்கள் ,மேலவனின் குரல்,
ஒரிஜினல் இல்லாட்டி உங்கள் கையிலிருப்பது குப்பை!
பரிவற்ற பரிசோதகரின் பரிகாசம்.,
எதுவும் பிரஞையிலில்லை !
கண்ணாடி கிழித்துவரும் கதிர்கூட கனிவு,
சுளீரில்லை " சுள்"தான் .
சைடு லோவரில் சரிநிகராய் நாமிருக்க!

2016 AUGEST 29 


Sunday, 28 August 2016

சரசம் - என்ற கவிதைத்தொகுப்பு



"சரசம்" என்ற வார்த்தையின் முழு அர்த்தம் பிடிபடவேண்டுமா கி.ரா எழுதிய "கனிவு" என்ற ஒரு சிறுகதையை மட்டும் படியுங்கள் போதும் என்று நேற்றைய சிறப்புரையில் எஸ்.ரா குறிப்பிட்டார். மேலும் பல சிறுகதைகளை அவர் தொட்டு பேசினாலும் இந்த கனிவின் களம் மிகக்கவர்ந்தது (அவ்வளவு ரொமான்டிக்கான கதை).

வீடு அடைந்தவுடன் கனிவை தேடி வாசித்தேன். கனிவு என்ற பெயருக்கு தகுந்தமாதிரி காதலும் காமமும் கசிந்துக்கொண்டே இருந்தது கதை நெடுக.

கதைக்களம் இதுதான் புதிதாய் திருமணமானவர்களின் முதல் கூடலை அந்த சமுதாய மக்கள் நாள் நட்சத்திரம் பார்த்து நடத்துவதில்லை. இணைகளுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது நடக்கட்டும் என்று விட்டுவிடுவார்கள் . இந்த கதையில் வரும் இணைகள் அவ்வளவு இயல்பாக இணங்கிவிடுவதில்லை என்ற முடிவோடு இருக்க . அவர்களுக்குள்ளிருக்கும் அகங்காரம் அவர்களை முரண்டுபிடிக்க வைக்கிறது. இருந்தும் சிறு சிறு சீண்டல்கள் ஊடல்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது . அவர்களுக்குள் கடைசியில் அந்த முதல் கூடல் நிகழ்ந்ததா என்பதுதான் கதை .

புடனி காதுமடல் பரவ முதுகு தேய்க்க இருவரும் சிலிர்ப்பது , மோர் சிலுப்பும் மனைவியை பின்னிருந்து ரசிப்பது , வெண்ணை கேட்ட கையை கிள்ளிவைப்பது, காயத்தில் நெய்யிடுவது , பார்க்க பார்க்க அழகு கூடுவது, செத்துவிடுவோமோ என்று தூக்கி போகும் அவனைப்பார்ப்பது , நீண்ட நாட்களுக்கு பின் அணைத்து உடனே விலகுவது ,எதிர்பாராமல் அவன் வர எதிர்பார்த்து அவள் நிற்பது , அந்த உப்பு முத்தமும் நெய்யிட்ட பப்பு சாதமும் என்று கதை நெடுக கவிதைகள் . ஒரு கவிதை தொகுப்பை சிறுகதை என்று சொல்லி நம்மை ஏமாற்றி இருக்கிறார் .

கதை படித்தபின் ஒரே ஒரு விஷயம்தான் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது . வாழ்வின் அரிய தருணங்கள் நிகழ வேண்டும் நிகழ்த்த முற்படக்கூடாது . அப்படிப்பட்ட விஷயங்கள் நிகழும்போதுதான் அழகு . அப்படி நிகழட்டும் என்றிருந்த அந்த மக்கள் எவ்வளவு பண்பட்டவர்கள் . நாம் இன்னும் நாள் நட்சத்திரம் பார்த்து நிகழ்த்திக்கொண்டுதானே இருக்கிறோம் .

குறிப்பு : இந்த கதையை 1970 ல் எழுதியிருக்கிறார் குமுதத்தில்(?) வெளிவந்துள்ளது . கட்டாயம் வாசிக்கவேண்டிய சிறுகதை

கனிவு சிறு கதையை படிக்க