Monday, 6 June 2016

வாசகனுக்கு வழிகாட்டியவர்

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் விகடனை புரட்டிகொண்டிருக்கும் போது சில கவிதைகள் நிறைந்த பக்கம் கண்ணில்பட்டது. அனைத்து கவிதைகளிலும் காதலும் காமமும் கலந்து கசிந்துக்கொண்டிருந்தது . முதல் வாசிப்பிலேயே வசீகரித்தது. அடுத்த வாரத்திலிருந்து முதலில் அந்த பகுதி எங்கே என்று தேடி வாசிக்கத்தொடங்கினேன் . அப்பகுதி நிறைவுற்றப்பின் அது புத்தகமாய் வந்த செய்தி விகடனில் வந்தது. அந்த கத்தரிப்பை எடுத்துக்கொண்டு  குறிப்பிட்டிருந்த முகவரியை நோக்கி புறப்பட்டேன்.தி. நகரில் அந்த குறிப்பிட்ட சாலை சுமார் 2 - கி மி நீளமுடையது என்பதும் , அது இரண்டு பகுதிகளாய் இருக்கிறது என்பதும் நான் தேடிவந்த இடத்துக்கு முற்றாக எதிர் திசையில் இருக்கிறேன் என்பதும் அங்கு அரைமணி நேரம் அலைந்த பின் ஒரு ஆட்டோ காரர் சொல்லித்தான் புரிந்தது. ஒரு வழியாய் தேடிவந்த இடத்தை அடைந்தால் ஒரு பழைய வீடு இருந்தது. உள்ளிருந்து ஒருவர் வேகமாய் வெளிவந்தார் . பார்த்தமாத்திரத்தில் திகைத்தேன் காரணம் ருசித்து வாசித்த அத்தனை கவிதைகளையும் எழுதியவர்.

புத்தகம் வாங்கவந்ததை கூறினேன். தவறுதலாக இந்த முகவரியை இட்டுவிட்டனர் . கொஞ்ச தூரத்தில் "நியு புக் லேண்ட்" என்ற புத்தக கடை இருக்கிறது அங்கு கிடைக்கும் என்றார். நான் விழிப்பதை பார்த்து புரிந்தவராய் எப்படி அங்கு செல்வது என்று வழியை விளக்கினர். பின் என்னைப்பற்றி விசாரித்தார் , திருமணம் ஆகிவிட்டதா ? என்றார் . இல்லை என்றவுடன் பின் எதற்கு "மழைப்பேச்சு "? என்று புன்முறுவல் பூத்தார்! நான் சிரித்தேன் . கொஞ்ச நேரம் பேசிய பின் . வாங்க சென்ற புத்தகத்தை எங்கு வாங்க வேண்டும் என்று அந்த புத்தகத்தை எழுதியவரே வழி சொல்லும் பேறு கிடைத்த மயக்கத்தில் நன்றி தெறிவித்து திரும்பினேன்.மீண்டும் அழைத்தார் என் எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் . என்னால் நம்பவே முடியவில்லை எழுத்து ஆளுமைகள் தங்களை சுற்றி கொஞ்சமும் நெருங்க முடியா பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்வர் என்றே நம்பிக்கொண்டிருந்த எனக்கு அதிசயமாய் இருந்தது . எண்ணை பெற்றுக்கொண்டு "அறிவுமதி அண்ணன் " என்று சேமித்துக்கொண்டேன் . கடைசி வரை அந்த எண்ணை பயன்படுத்தவே இல்லை . சில ஆண்டுகளில் PHONE- மாற்றும்போது காற்றில் தொலைந்துப்போனது அந்த எண்


                                           ………………………………………….



        சில வாரங்களுக்கு முன் மீண்டும் அந்த புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்று தோன்றியது .மீள் வாசிப்பில் புதிதாய் இருந்தது அப்பொழுது புரியாததாய் தெரிந்த சில கவிதைகள் இப்பொழுது புரிந்தது போல தோன்றியது. நேற்று புத்தகக்காட்சிக்கு சென்ற பொழுது ஒரு அரங்கில்(அரங்கு எண் - 133& 134 அன்னம்) கி. ராஜநாராயனின் படங்கள் நிறைந்திருந்தது ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தால் அரங்கு முழுதும் அவரது படைப்புகள் . அங்கே குவியலாய் “மழைப்பேச்சு” அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நண்பன் ஒருவனுக்கு திருமணம் வருவதால் அவனுக்கு பரிசளிக்கலாம் என்று (திருமணதிற்கு பரிசளிக்க அவ்வளவு சிறந்த புத்தகம் , இணைகள் இருவர்கும் கவிதைகள் ருசிக்க தெரிந்தால் இன்னும் சிறப்பு )ஒரு புத்தகத்தை எடுத்து பில் போட கொடுத்தால் 50 ரூ என்று போட்டார்கள். அவர் தவறாய் எழுதிவிட்டாரோ என்று விசாரிக்க . இந்த புத்தகம் 50 ரூ தான் என்று உறுதிப்படுத்தினார். வியப்போடு இன்னொரு புத்தகத்தை எடுத்து வந்து அதையும் சேர்த்து பில் போட சொன்னேன் , இதே புத்தகத்தை 5 அண்டுகளுக்கு முன் வாங்கும்பொழுது 200ரூ . இப்பொழுதும் அந்தப்புத்தகத்தின் தரமான வண்ண பக்கங்களுடன் கூடிய வடிவமைபிற்கு & கட்டுமானதிற்க்கு மட்டுமே 150ரூ தரலாம் (உள்ளடக்கத்தை இதில் சேர்க்கவில்லை ). இவ்வளவு மலிவாய் தருகிறார்களே என்பது ஒரு வாடிக்கையாளனாய் மகிழ்ச்சியாய் இருந்தாலும் வாசகனாய் வருத்தமளித்தது .இந்த வாரக்கடைசியில் மீண்டும் ஒருமுறை சென்று 5&6 பிரதிகள் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும் என்று திட்டம் . அப்படி செல்லும் பொழுது எல்லாம் விற்றுத்தீர்ந்திருந்தால் வாசகனாய் மகிழ்ச்சிக்கொள்வேன் .


இந்த புத்தகத்தில் ஒரு கவிதை மிகவும் பிடித்தமானது . மனதில் படிந்து போன அந்த கவிதை

அந்த அழகான மாலையில் இசை கேட்டுக்கொண்டிருந்த என்னையும் 
படித்துக்கொண்டிருந்த உன்னையும் 
இந்த சூழலுக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன 
முகர்ந்து கொண்டிருந்த இரண்டு எறும்புகள்
                                                                                                     ……………..அறிவுமதி

Sunday, 5 June 2016

ஆதர்சனத்தின் ஆதர்சனம்









    நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் என்ற வசனத்தைப்போல . நம் ஆதர்சனத்தின் ஆதர்சனம் நமக்கும் ஆதர்சனம்தானே . அப்படித்தான் P.S.ராமையா பற்றிய அறிமுகம் கிடைத்தது . சி சு செல்லப்பா பற்றிய விஷயங்களை படித்த பொழுது இவரது பெயர் பல இடங்களில் தட்டுப்பட்டது.எல்லாவற்றிற்கும் சிகரம்வைத்தாற்போல் தனக்கு கிடைத்த ஒரு விருதிற்கான பரிசுத்தொகையை கொண்டு தன்னுடைய புத்தகத்தை வெளியிடாமல் P.S.ராமையா பற்றிய திறனாய்வை வெளியிட்டார் என்பது . ராமையா பக்கம் ஆர்வத்தை திருப்பிவிட்டது . அவரின் பல புத்தகங்கள் பதிப்பில் இல்லை . தேடிய பொழுது அம்ருதா வெளியிட்டுள்ள முத்துக்கள் பத்து (பத்து சிறுகதைகள் ) கிடைத்தது. அத்தனையும் முத்துக்கள் தான், மிரள விட்டார் . மணிக்கொடி காலம் - என்ற புத்தகமும் பதிப்பில் இருக்கிறது . இந்த புத்தக கண்காட்சியில் சி சு செல்லப்பா & P.S.ராமையா படைப்புகளை தேடவேண்டும் என்றிருந்தேன் . இடையில் அழகியசிங்கர் - விருச்சம் அரங்கு கடைசியாய் அமையபெற்றதாய் வருந்தி ஒரு பதிவு இட்டிருந்தார் . அதனால் இம்முறை முதலில் அந்த அரங்கிற்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன் . மிஷ்கினின் "ஓநாய் ஆட்டுக்குட்டி " புத்தக வெளியீட்டிற்கு சில காரணங்களால் செல்லமுடியவில்லை, அவர் ப்யூர் சினிமா அரங்குக்கு வருவதாய் தகவல் . எனவே இரண்டு அரங்கிற்கு முக்கியமாக செல்லவேண்டும் முதலில் விருச்சம் அரங்குக்கு செல்லவேண்டும் என்ற முடிவோடு உள்ளே நுழைந்து ஸ்டால் 594 என்ற எண்னை தேடினால் 4 வரிசையில் கடைசியாய் காட்டியது . நேராக நடையைக்கட்டினால் 10 நிமிடத்தில் விருச்சம் வந்தது . அழகிய சிங்கர் இல்லை . கால சுப்ரமணியன் இருந்தார் . அரங்கில் நுழைந்ததும் முதலில் பழப்பு நிறமான ஒரு புத்தகம் கண்ணில் பட்டது . நமக்கென்று எழுதப்பட்டது நம்மை வந்து சேரும் என்கிற தத்துவத்தை பலர் மூடநம்பிக்கை என்று மறுப்பார்கள் , எனக்கு அதீத நம்பிக்கை உண்டு . காரணம் தொடர்ந்து பல விஷயங்கள் எனக்கு நடந்துகொண்டே இருப்பதால் . அந்த புத்தகத்தை அவ்வளவு மகிழ்ச்சியோடு எடுத்தேன் சி சு செல்லப்பா எழுதிய " ராமையாவின் சிறுகதை பாணி " (அந்த திறனாய்வு நூல் ). இந்த கண்காட்சியில் முதலாவதாக எடுத்த புத்தகம் கடந்த ஆறு மாதமாக தேடிக்கொண்டிருந்தது . கை வந்து சேர்ந்தது . 200% விலை ஏற்றத்தோடு விற்க தகுதியான இந்த புத்தகத்தை 30 % தள்ளுபடி கொடுத்தார்கள்.