Monday, 5 October 2015

மாசில் வீணையும் ....மணவை மார்கழியும்

   மெலிதாக காதோரம் அடிக்கும் குளிரை தடுக்க போர்வையை மேலே இழுத்தால் காலில் குளிரடிக்கும். கொஞ்சம் உடலை சுருக்கி படுத்தால் அந்த சிறு போர்வைக்குள் பொருந்தலாம் . பனியை தடுக்கும் போர்வை காற்றில் பரவும் ஒலியை தடுக்க தடுமாறும் .அடுக்களையில் அம்மாவோ, ஆத்தாளோ பாத்திரங்களை உருடிட்கொண்டிருபர். அதையும் கடந்து மெல்லிய குரலில் ஒரு ராகம் போர்வை வளையத்தை முட்டி மோதிகொண்டிருக்கும் .அந்த குரல் நிற்கும் சிறு இடைவேளையில் கஞ்சிரா ஒலி உச்சமடையும் .மார்கழி ன் 30 -நாட்களும் இது நடைமுறை.

   எழுந்து அரை தூக்கதில் இசை வரும் திசை நோக்கி சென்றால் , குளிருக்கு இதமாய் சால்வை போர்த்தி அக்கால அரிக்கேன் விளக்கும் இக்கால Torch – விளக்கு,கஞ்சிரா சகிதம் இசைத்து கொண்டிருப்பார் தாதர். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு வீடு என்று அழுத்தி நிறுத்த முடியாத அலாரமாக நகர்ந்துகொண்டிருப்பார் .

   அவரை தொடர்ந்து வாசல் படி தாண்டினால் மப்ளர் கட்டிய வீட்டு பெண்கள் வண்ண கோலம் வரைந்துகொண்டிருப்பர். வண்ணம் தீட்ட தெரியாத வயதென்றாலும் பெரிய பூ ஒன்றுக்கு தீட்ட சொல்லுவர். பெரிய கோலங்களாக இட வேண்டும் என்று பக்கத்துக்கு வீட்டு அக்காக்களுடன் போட்டி போட்டு கொண்டு வரைந்து விட்டு வண்ணம் தீட்ட திண்டாடி கொண்டிருப்பார் . அந்த சமயத்தில் சிக்கிய அடிமைகள் நாமாக இருப்போம் .பரங்கி பூ பகிறும்  சாக்கில் பக்கத்துக்கு அக்காக்கள் கோலங்களை நோட்டம் விட வருவர் . சாப்பிட தெரியாத குழந்தை பூசி மொழுகுவது பொல வண்ண பொடியை அள்ளி தெளித்துவிட்டு S-ஆவதில் மும்முரமாய் இருப்போம் நாம் . மெல்ல வெள்ளி முளைக்க , நீறு பூசிய உடம்புடன் சில அண்ணன்மார்கள் "மாசில் வீணையும் மாலை மதியமும்" என்று பாடிய வண்ணம் தெருவை கடந்து செல்வர் . தாதருக்கு இணையாக இவர்களும் நம்மை வசீகரிப்பர் . இவர்களை போலகவேண்டும் என்று தோன்றும்.

  அடுத்தடுத்த சில ஆண்டுகளில் அது நடந்தது . ஒரு சுப தினத்தில் முத்த அண்ணன்மார்கள் அன்புடன் படையில் சேர்த்துகொண்டனர் . ஒரே ஒரு நிபந்தனையோடு அவர்கள் பலி கேட்டது " மார்கழி மாதம் காலை தூக்கம் ".இரவே போர்வையுடன் போருக்கு போவதுபோல் யாராவது ஒருவரது வீட்டு திண்ணையில் ஐக்கியமாகி . வீண் கதை பேசி தூங்க 10-11 மணி ஆகும் . காலை 4-4.30 க்கு யாரவது எழுப்ப ,சிலரை பன்னீர் தெளித்து எழுப்பவேண்டிவரும் .மொத்தமாக மம்முசாமி கரையிலோ அல்லது சந்தை பேட்டை புள்ளையார் கோயில் கரையிலோ குளித்து . இங்கு குளித்து என்று ஒரு வரியில் சொன்னாலும் ,தண்ணீரை பதம் பார்த்து கொண்டிருக்கும் சிலரை முக்கி எடுக்க அரைமணி நேரம் ஆகும் .அந்த சிலரில் நானும் ஒருவன் என்பதை இங்கு பெருமையுடன் பதிவிடுகிறேன் .சித்தநாதன் விபூதியை உடலில்  கை எட்டும் இடம் வரை பூசி . இருக்கிற இசை கருவிகளை பங்கிட்டு ( நம்மை போன்ற புது வரவுகளுக்கு சோடா மூடி தைத்த கட்டைகள் கிடைத்தாலே பாக்கியம்) .புள்ளையாரை கும்பிட்டு மாசில் வீணையும் என்று தொடங்கினால் .....உண்மையை சொல்லப்போனால் அண்ணன்மார்களுக்கு 5-6 பாடல்கள் தெரியும் மற்றபடி நாங்கள் எல்லாரும் ஒரு support -அவளவே .அவர்கள் பாடி முடித்தவுடன் இருக்கிற இசைக்கருவிகளை இயன்றவரை அடிக்கவேண்டும் அதுவே எங்கள் பணி.

  தொடங்கிய இரண்டு நாளிலேயே  மற்ற தெருக்களில்  நாய்களின் இருப்பிடங்கள் உறுதி செய்யப்படும் . அந்த ஏரியாக்களில் படை Airplane mode-க்கு சென்றுவிடும் .சில எதிர்பாராத தருணங்களில் பக்கத்துக்கு தெருக்களின் படைகளை கடந்து செல்ல நெரிடும் அப்போது 19999 hrs decibel- தொடும் அளவுக்கு ஒலிஎழுப்பி நம் தெருவின் மானம் காக்கவேண்டிவரும் .அந்த 5 நொடிகள் இந்தியா பாகிஸ்தான் 20-20 பார்க்க கிடைக்கபெற்றவர்கள் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் .

  திருவாதிரையும் பொங்கலும் - இந்த காலகட்டத்தில் எதிர்கொள்ளும் இரு பெரும் நிகழ்வுகள் . 40- பக்க நோட்டுடன் உலாவருவோம் . இந்த சமையத்தில் நம்மை வம்பிழுக்கவே சில பெரியவர்கள்  " பொன்னர் மேனியனே " படுங்கடா என்று தெரியாத தேவாரத்தை கேட்பார். அது போன்ற சமயங்களில் ROCK STAR DSP- போன்று அதே வரியை திரும்ப திரும்ப 4-தடவை பாடிவிட்டு வேகமாக இசைக்கருவிகளை அடித்துவிட்டு ஓடிவிடுவோம் . சில அத்தைமார்கள் என்னடா இன்னைக்கு எங்க வீடுகிட்ட பாடலியே என்று அலுத்துக்கொண்டு (என்றாவது  நல்ல மழை நாளில் எல்லாரும் தூங்கி தேவாரமே பாடாமல் இருந்திருப்போம் )அரிசியும் சில்லறை  காசுகளும் தருவர் .அந்த 40- நோட்டு நாலு பக்கம் நிரம்பினாலே பெரும் சாதனை . ஒரு வழியாக கிடைத்ததை வைத்து அபிஷேக பொருட்கள் ஏற்பாடு செய்து யார் வீட்டிலாவது பிரசாதம் செய்து . பொங்கல் அன்றோடு தேவாரம் நிறைவு செய்யப்படும் . மதியம் பொங்கல் உண்டு உறங்கும் வேளையில் நாளை காலை எழ வேண்டாம் என்ற சந்தோஷம் இருந்தாலும் . ஒரு இனம் புரியாத இழப்பு உணரமுடியும் .

  இந்த தேவாரம் பாடும் பழக்கம் எப்படி எங்கள் கிராமத்திற்கு  வந்தது, யார் இதை தொடங்கிருப்பர்  என்ற தகவல் ஏதும் இல்லை . இது ஒரு அற்புதமான கலாசார நிகழ்வு என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.தேவார பொருளோ ,மகிமையோ புரியாத வயதென்றாலும் . மார்கழி மாதம் காலையில் எழுதல்,குழுவாக செயல்படுதல் ,சிறிய அளவே இருப்பினும் பணத்தை கையாளுதல் போன்ற பெரும் விஷயங்களுக்கான விதையே அங்கே விதைக்கபடுகிறது  .  அந்த நிகழ்வு  ஒரு ஒலிம்பிக் விளக்கு போல ,தொடர் ஓட்டத்தின் மரத்துண்டு போல சில காலம் மட்டும் நம் கையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கை மாற்றபடுகிறது . அந்த விளக்கு அணையாமல் இருக்கிறதா என்பது மட்டுமே நாம் உறுதி செய்து கொள்ளவேண்டிய விஷயம் . இன்றும் என்றும்.