Saturday, 7 May 2016

பிழைத்தது

    சாலையில் எதிர்படும் இறுதி ஊர்வலத்தில் தெளிக்கப்படும் ரோஜாவும் செவந்தியும் கலந்த வாடை அடி வயிற்றை சோர சொரக்க செய்யும் .மரணம் எப்போதும் ஒரு வித பயத்தை பதற்றத்தை நம்முள் விரவச்செய்கிறது . எல்லோரும் மரணத்தை நோக்கித்தான் நகர்ந்துக்கொண்டிருகிறோம் என்றாலும் கூட, முடிந்தவரை அது சார்ந்த சிந்தனைகளை பிரக்ஞையோடு தவிர்க்கிறோம். ஆனால் மரணம் சார்ந்த தத்துவ விசாரணையைத்தான் ஞானமடைதற்கான முதல் படியாய் கொடுக்கிறது இந்து மதம் . சக மக்களின் இறப்பை பார்த்த புத்தரில் தொடங்கி சகோதரனின் இறப்பால் ஞானமடைந்த J.கிருஷ்ணமூர்த்தி வரை மரணம் பற்றிய சுயவிசாரணைகள் பல மகான்களை கொடுத்துள்ளது.

  “செத்து பொழச்சவன்டா” என்று ஆர்ப்பரிக்கும் ஒரு  வார்த்தை உண்டு . உண்மையாகவே சாவை பார்த்து வந்தவர்கள் பாக்யவான்கள் பெரும் பேறு பெற்றவர்கள் . அது கொடுத்து செல்லும் படிப்பினை வேறு எதுவுமே கொடுக்கமுடியாது.Cricket -ல் ஒரு வீரர்  அதுவரை பொறுமையாய் சோபிக்காது ஆடிக்கொண்டிருக்க   , எதிரணி விட்ட ஒரு catch-க்கு பின் . அவருக்கு கிடைத்த ஒரு life-க்கு பின் அந்த  வீரரின் ஆட்டத்தின் போக்கு முற்றாக மாறுவதை கவனித்திருக்கிறீர்களா ! அதே ஆட்டக்காரர் அதே பந்துவீச்சாளர் அதே களம். எதுவுமே மாறவில்லை .அவர் அந்த ஆட்டத்தை எதிர்கொள்கிற  விதம் மாற எல்லாமே மாறிப்போகிறது . செத்துப்பிழைத்தவர்களின் வாழ்க்கையும் இப்படித்தான் மாறுகிறது . வாழ்க்கையை பார்க்கும் அடிப்படையே மாறிப்போவதால்.

  இந்த விஷயத்தைத்தான் உத்தம வில்லனில் கமல் பேச முற்பட்டார், நகைச்சுவையை கலக்க முனைந்து பேச வந்த பொருளின் வீரியம் விழலுக்கு இரைத்த நீராகியது. மனோரஞ்சனின் பாத்திரம் வரும் பகுதியை மட்டும் தனியே எடுத்து பார்த்தால் அது ஒரு காவியம் . "சாவுற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாகிவிடும்"என்ற சுஜாதாவின் வசனத்துக்கு முற்றாக வேறான நிலைப்பாட்டை மனோரஞ்சன் எடுப்பார் சாகும் நாள் தெரிந்த  பின் வாழும் நாட்களை எப்படி சொர்க்கமாக்கலாம் என்ற முயற்சியில் ஈடுபடுவார் . சண்டையிட்டு கொண்டிருந்தவரிடம் வலிய சென்று உறவை புதுப்பிப்பார் , தன் பெயர் சொல்லும் ஒரு படைப்பை உருவாக்கும் முயற்ச்சியில் இறங்குவார் .நாம் மனோரஞ்சனின் நிலையில் இருந்தால்  நம்முடைய   நாளை இன்று போலவே இருக்குமா ?

 இன்று படித்த P.S.ராமையாவின் "பணம் பிழைத்தது " என்ற சிறுகதை இறப்பை பற்றிய விஷயங்களை கிளறிவிட்டது . கடுமையாய் உழைத்து செல்வந்தரான  அருணாச்சல முதலியார் தன் கடைசிக்காலத்தில் காலனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப்பற்றிய கதை . கதை முடிந்த பின் அந்த அருணாச்சல முதலியாரோடு  நம்மை பலவாறு ஒப்பிட்டுக்கொள்ள தோன்றுகிறது . சாவை எதிர்கொள்கிறவர்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் எதிர்கொள்வார்களா! செத்து பிழைத்தவர்கள் எல்லோரும் அப்படியே மாறிவிடுவார்களா என்பதற்கு அது அவர் அவரின் பக்குவத்தைப்போருத்தது என்று புடனியில் அடித்து சொல்கிறது இந்தக்கதை.