Sunday, 28 August 2016

சரசம் - என்ற கவிதைத்தொகுப்பு



"சரசம்" என்ற வார்த்தையின் முழு அர்த்தம் பிடிபடவேண்டுமா கி.ரா எழுதிய "கனிவு" என்ற ஒரு சிறுகதையை மட்டும் படியுங்கள் போதும் என்று நேற்றைய சிறப்புரையில் எஸ்.ரா குறிப்பிட்டார். மேலும் பல சிறுகதைகளை அவர் தொட்டு பேசினாலும் இந்த கனிவின் களம் மிகக்கவர்ந்தது (அவ்வளவு ரொமான்டிக்கான கதை).

வீடு அடைந்தவுடன் கனிவை தேடி வாசித்தேன். கனிவு என்ற பெயருக்கு தகுந்தமாதிரி காதலும் காமமும் கசிந்துக்கொண்டே இருந்தது கதை நெடுக.

கதைக்களம் இதுதான் புதிதாய் திருமணமானவர்களின் முதல் கூடலை அந்த சமுதாய மக்கள் நாள் நட்சத்திரம் பார்த்து நடத்துவதில்லை. இணைகளுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது நடக்கட்டும் என்று விட்டுவிடுவார்கள் . இந்த கதையில் வரும் இணைகள் அவ்வளவு இயல்பாக இணங்கிவிடுவதில்லை என்ற முடிவோடு இருக்க . அவர்களுக்குள்ளிருக்கும் அகங்காரம் அவர்களை முரண்டுபிடிக்க வைக்கிறது. இருந்தும் சிறு சிறு சீண்டல்கள் ஊடல்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது . அவர்களுக்குள் கடைசியில் அந்த முதல் கூடல் நிகழ்ந்ததா என்பதுதான் கதை .

புடனி காதுமடல் பரவ முதுகு தேய்க்க இருவரும் சிலிர்ப்பது , மோர் சிலுப்பும் மனைவியை பின்னிருந்து ரசிப்பது , வெண்ணை கேட்ட கையை கிள்ளிவைப்பது, காயத்தில் நெய்யிடுவது , பார்க்க பார்க்க அழகு கூடுவது, செத்துவிடுவோமோ என்று தூக்கி போகும் அவனைப்பார்ப்பது , நீண்ட நாட்களுக்கு பின் அணைத்து உடனே விலகுவது ,எதிர்பாராமல் அவன் வர எதிர்பார்த்து அவள் நிற்பது , அந்த உப்பு முத்தமும் நெய்யிட்ட பப்பு சாதமும் என்று கதை நெடுக கவிதைகள் . ஒரு கவிதை தொகுப்பை சிறுகதை என்று சொல்லி நம்மை ஏமாற்றி இருக்கிறார் .

கதை படித்தபின் ஒரே ஒரு விஷயம்தான் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது . வாழ்வின் அரிய தருணங்கள் நிகழ வேண்டும் நிகழ்த்த முற்படக்கூடாது . அப்படிப்பட்ட விஷயங்கள் நிகழும்போதுதான் அழகு . அப்படி நிகழட்டும் என்றிருந்த அந்த மக்கள் எவ்வளவு பண்பட்டவர்கள் . நாம் இன்னும் நாள் நட்சத்திரம் பார்த்து நிகழ்த்திக்கொண்டுதானே இருக்கிறோம் .

குறிப்பு : இந்த கதையை 1970 ல் எழுதியிருக்கிறார் குமுதத்தில்(?) வெளிவந்துள்ளது . கட்டாயம் வாசிக்கவேண்டிய சிறுகதை

கனிவு சிறு கதையை படிக்க

No comments:

Post a Comment