Friday, 26 April 2019

குறத்திமுடுக்கு -ஜி.நாகராஜன்

அது ஒரு உடலியல் தேவை மட்டுமே மனதிற்கு அங்கு வேலை இல்லை என்று நம்புபவன் .காதல் , கல்யாணம் பற்றி ஒரு சித்தாந்தத்தை உருவேற்றிகொண்டு இருப்பவனின் உறுதி எப்படி மாறுகிறது !அந்த ஊரின் உடலியல் தேவையை நிறைவு செய்யும் குறத்திமுடுக்கு எப்படி இவனின் உளவியலில் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்கிறது என்பதை எண்பது பக்கத்தில் சொல்கிறார் ஜி .நாகராஜன்.

தங்கத்தின் கதை மையமாக நிற்க, முதலும் முடிவுமற்ற செண்பகத்தின் கதையும் ,எதில் சேர்ப்பது என்று நம்மை விக்கித்து நிற்கச் செய்யும் தேவயானை கதையையும் பின்னி பிணைக்கிறது குறத்தி முடுக்கு .தான் மாறக்கூடாது என்று நிற்கும் ஒரு ஆண் மனதில் நிகழும் மெல்லிய மாறுதல்களை எழுத்தில் அவ்வளவு நேர்த்தியாய் காட்டிய அதே வேளையில் ஒரு பாலியல் விடுதியின் இருள் வெளியின் ஆழத்தையும் அழுக்கையும் செண்பகத்திற்கு நிகழ்ந்ததையும் , தேவையானை எடுத்த முடிவை வைத்து நமக்கு விளங்க வைக்கிறார் .அந்த இரு பெண் கதாபாத்திரங்கள் அனுபவித்த கோர அதிர்வில் சிறு பகுதியை நம்முள் கிடத்திவிட்டு செல்கின்றன. "காத்திரமான" என்ற வார்த்தை இவருக்காகவே உருவாகியிருக்குமோ ! என்று தோன்றுகிறது . ஏன் இப்படி எழுதுகிறேன் என்று என்னிடம் கேட்பதை விடுத்து ஏன் இப்படி நம்மைச் சுற்றி நடக்கிறது என்று கேளுங்கள் என்கிறார் .

குறிப்பாக தேவயானை கதையை பற்றிக் குறிப்பிட வேண்டும் ,அந்த நாலு பக்கத்தை மட்டும் ஒரு சிறுகதையாகக் கொள்ளலாம் . இருந்தும் குறத்தி முடுக்கின் புழுதிகளில் அலைந்துவிட்டு நாம் அந்த கதையை எதிர்கொள்ளும் பொது அவ்வளவு பிரம்மண்டமாகி நிற்கிறார் ஜி. நாகராஜன் .ஒரு மேஜிக் நிபுணர் இரண்டு நிமிட மேஜிக் செய்ய இருபது நிமிடம் மேடையையும் பார்வையாளனையும் ஆயத்தம் செய்வது போல. அந்த நாலு பக்க கதையைச் சொல்லத்தான் அத்தனை பக்கம் நம்மை ஆயத்தம் செய்தாரோ? நிச்சயம் அது ஒரு மேஜிக் .


No comments:

Post a Comment