Monday, 23 October 2017

   சம்பாரம்



    ஆறாறு முப்பத்தாறு , ஆறேழு நாப்பத்திரெண்டு என்ற சப்தம் மட்டும் காதில் கேட்டுக்கொண்டிருந்தாலும் , நாசியைத் துளைத்துக் கொண்டிருக்கும் சத்துணவின் தாளிப்பு , வெண்கல மணியை மரசுத்தி முத்தமிடும் சப்தத்தை எதிர்நோக்கச் செய்யும் . பாவ்ளாவின் நாய்- மணி சோதனை நம்மையறியாமல் நம்முள் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் . சப்தம் செவிப்பறையை தொட்ட வினாடி வெளியே ஓட எத்தனிக்க . நாளைக்கு இதை 3 வாட்டி எழுதிட்டு வாங்க .என்று ராதாகிருஷ்ணன் சார் சொல்லவும் சரியாக இருக்கும். நாளைக்கு சம்பாரம் சார்! ஸ்க்கூல் லீவு ,ஒருமித்த குரலில் என்று சொல்ல . இதற்கெல்லாம் லீவா என்று கேள்வியே முகமாக அறையை விட்டு விலகுவார்.


    வெளியே ஓடி வந்தால் ஐப்பசி மாச மேகக்கூட்டம் கிழத்தெரு முனையில் முகிழ்ந்து நிற்பது போலதொரு பிரமை கொடுக்கும் சூழ்ந்துநிற்கும் சாம்பிராணி புகை . மேகம் விலக வேல் வந்துகொண்டிருக்கும் . நவ வீரர்களாய் காப்புகாட்டிக்கொண்டவர்கள் வேல் தூக்கிக்கொண்டுவருவார்கள் . வீட்டு வாசலில் குடத்து தண்ணீருடன் பெண்கள் காத்து நிற்பார்கள். அவரவர் வீட்டு வாசலுக்கு வருகையில் வேல் வீரர்களின் காலில் நீரை ஊற்றி ஆசி வாங்குவர் . நவ வீரர்களின் மையமாக வீரவாகுவாய் வரிந்துக்கொண்டு KKS- நிற்பார் தேஜசுடன், எல்லோருக்கும் திருநீர் கொடுப்பார் . கடக்கும் வேளையில் நாமும் தலையை நீட்ட மேலுக்கு சிறு தெளிப்போடு நெற்றியில் திருநீரு இடுவார் . அடுத்து "ஆ" வென வாயை திறந்துநிற்போம் வேறு வழியில்லாமல் கையில் இருக்கும் மிச்சத்தை வாயில் போடுவார் . இப்போதெல்லாம் விபூதியில் அந்த சுவை இருப்பதில்லை. மண் நிறைந்த அந்த தெருவில் பெண்கள் ஊற்றிய நீர் ஏற்படுத்திய நீர்ச்சுவடு வீடுகளுக்கியிடையே உருவாக்கிய நீர் பாலங்கள் ஒரு மாய தண்டவாளமாய் வானில் சுற்றிக்கொண்டிருக்கும் கருடனுக்கு தெரிந்திருக்கலாம் .


   தீபாவளிக்கு பின் தொடங்கும் கந்தசஷ்டி ஆறு நாட்கள் தொடரும் . ஒன்பது பேர் தங்களை நவவீரர்களாக வரிந்துக்கொண்டு காப்புக் கட்டிக்கொள்வர் . மதியமும் ,இரவு உற்சவர் விதிவுலாவுடன் வேல் எடுத்துக்கொண்டு வீதி வலம் வருவார்கள் . முன்னெல்லாம் காலை உணவை தவிர்த்துவிட்டு மதியம் வேல் பார்த்த பின்னரே மதிய உணவை எடுக்கும் சில தாத்தாக்களின் கடும் விரதம் பற்றி அப்பா சொல்லி கேள்விப்பட்டதுண்டு . தீபாவளிக்கு வந்த சொந்தங்கள் ஊருக்குசென்றுவிடாமல் இருக்க காப்புத்தடை என்றொரு அஸ்திரத்தை அம்மாக்களும் ஆத்தாக்களும் பிரயோகிப்பார்கள் . காப்பு காட்டுகையில் ஊர் எல்லைக்குள் இருந்தால் அவர்கள் சம்பாரம் பார்த்தே ஆகவேண்டும் .இதற்கு பயந்தே பக்கத்து கிராமங்களான ஆலங்குடிக்கும் , காடந்தேத்தி உண்டியல்அடிக்கும் தெறித்து ஓடுவர் வெளியூர் வாழ் மணக்குடி சொந்தங்கள் . ஒருசில முறை அங்கு சென்றதுண்டு ஏறக்குறைய " கிடாயின் கருணைமனு " படத்தில் வரும் உப்புமா கிண்டும் களம் போன்றே இருக்கும் அது .அந்த ராத்திரி நேரத்தில் இருட்டில் ஒரு கூட்டமாய் சம்மந்தமே இல்லாமல் அங்கு அவர்கள் இருப்பது நகைப்பாய் இருக்கும்.அவர்கள் அந்த பகுதியை கடப்பவர்களிடமெல்லாம் " காப்பு கட்டியாச்சா " என்று நச்சரித்துக்கொண்டிருப்பார்கள் .


   சூர சம்பாரம் அன்று காலையிலிருந்தே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். மக்கள் சுப்ரமண்யர் சந்நிதியில் மாவிளக்கு இட்டு அர்ச்சனை செய்துகொண்டிருப்பார்கள் . மாவிளக்கு சட்டி வைக்க இடமிருக்காது . கடந்த 364 நாட்களாக கன்னிமூலை கணபதியை பார்த்த கையோடு காலில் குத்திய நெருஞ்சி முள் கவனத்தில் போர போக்கில் இவருக்கு ஒரு கும்பிடை போட்டு விட்டு உலகநாயகி சன்னதிக்கு ஓடிய மக்கள்தான் அம்புட்டு பேரும் . இன்று பவ்யமாய் அவர் சன்னதியில் கண்மூடி நிற்பார்கள் . எங்கடா இருந்திங்க இவ்வளவு நாளா! என்று முருகனே விக்கித்து முறுவளிப்பதாய் தோன்றும் எல்லோரும் எல்லோருக்கும் மாவிளக்கு பிரசாதம் விநியோகிப்பார்கள் , எல்லாம் வெல்ல மாவிளக்காக இருக்க வெள்ளை மாவிளக்கு (சீனி போட்டது ) கிடைத்தால் நம் பாக்யம். முன்வாசலுக்கு வந்தால் அவ்வளவு நாள் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் அமானுஷ்யமாய் தலை இல்லாமல் நம்மை மிரட்டிக்கொண்டிருந்த சூரனின் மரச்சிலை , முண்டமே தேவலாம் ! என்பதைப்போல ஆனை முகம் தரித்து நம்மை அதிகமாய் மிரட்டிக்கொண்டிருக்கும் . உள் மண்டபத்தில் பளிங்கு கண் பதித்த ஆட்டு கிடா வாகனத்தில் முருகன் சிலையை ஆயத்தம் செய்துகொண்டிருப்பார்கள் . மாலையில் நடைபெறப்போகும் யுத்தத்திற்கு .


   வெளியூரில் வாக்கப்பட்டு போன பெண்கள் சம்பாரம் பார்க்க குடும்பத்தோடு வந்திருப்பார்கள் . தை பூசத்திற்கு தலைக்காடுக்கும் காளிகட்டுக்கு காட்டூருக்கும் இங்கிருந்து மக்கள் போவதுபோல , ஊர் முழுக்க விருந்தினர்கள் நிறைந்திருப்பார்கள். தெருவில் ஆங்காங்கே குசலம் விசாரித்துக்கொண்டிருக்கும் நபர்கள் கண்ணில் தட்டுப்படுவார்கள். சாயந்திரம் மக்கள் தயாராகிக்கொண்டிருக்க ஒத்தையடியாக தப்பு சப்தம் சூரனின் வரவை தெரிவிக்கும் . தெருவையே அட்டகாசம் செய்துகொண்டு போவார் அவர். சூரனை தூக்கிக்கொண்டு வரும் இளந்தாரிகள் கண்ணுமண்ணுதெரியாமல் ஓடுவார்கள் , தெருவிலிருப்பவர்கள் விலகுவார்கள் . சூரன் தெருவை கடந்துவிட்டால் இன்னும் 20 லிருந்து 30 நிமிடத்தில் வேல் வரும் என்பது ஒரு கணக்கு .

   தெருவே வேலை வரவேற்கும் வேலைக்கு தயாராகும் . தெரு முனையில் உள்ள மம்முசாமி வாசலில் கோலமிட்டு அவர்கள் அமர வசதி செய்து வைத்திருப்பார்கள், இதுபோல எல்லா தெருவிலும் வேல் வரவேற்பு நிகழும் . போருக்கு செல்வோரை அந்தக்காலத்தில் எப்படி வழியனுப்பி வைத்திருப்பார்கள், என்பதை கண்ணுற விரும்புவோர்கள் அந்த வேல் வரவேற்பை நிச்சயம் பார்க்கவேண்டும் . பஞ்சாயத்துபோர்டு முனையில் வேல் வந்துட்டு என்று சொல்பவர் ட்டு......... என்று முடிக்கும் முன் மம்முசாமியை வேல் வீரர்கள் ஒரு சுற்று சுற்றி இருக்கையில்அமர்ந்திருப்பர் . அத்தனை நாள் வந்த வேலாக அது இருக்காது வாயு வேகதில், மனோவேகத்தில் வந்து செல்லும் வேலாக இருக்கும். அமர்ந்த நொடியில் வேலுக்கு எலுமிச்சை மாற்றி வீரர்களுக்கு மாலை சாற்றுவர் ,பல இடங்களில் போட்ட மாலைகள் நிறைந்த மார்பில் திருநீறு துலங்க . வேல் தாங்கி நிற்கும் தோள்கள் அவ்வளவு அழகு , “தோள் கண்டார் தோளே கண்டார்” என்ற கம்பனின் பாட்டு கண்முன்வந்து செல்லும் . குடம்குடமாய் நீரை காலில் ஊற்றி ஆசி வாங்குவார்கள் . இது ஒரு சாதாரண காட்சியாய் கடக்கமுடியாதபடி பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் அந்த இடத்தையே பரிணமிக்கச்செய்யும் . வேலுடன் வரும் முதியவர் வேல் பாடல்களை பாடுவார் , அவர் தோதாக விடும் இடைவெளியில் சபாஷ் .....சபாஷ்..... என்றும் ஆ ஆ அலேபகா ... ஆ ஆ அலேபகா என்றும் வேல் வீரர்கள் தொடர்ந்து சொல்ல அங்கு கூடியிருக்கும் மக்களும் சபாஷ் சபாஷ் என்று சேர்த்துக்கொள்ள அந்த இடமே வேறொரு அதிர்வில் இருக்கும் .


  வேல் கோவிலை நோக்கிச் செல்லுகையில் இந்த சபாஷ் சப்தம் அதிகரித்துக்கொண்டே போகும் , காரணம் ஆங்காங்கே வேல் வரவேற்பு கொடுத்த மக்கள் வேலுடன் சேர்ந்து கொண்டே செல்வதால் . பலர் சம்கார களத்துக்கு சென்றாலும் . விஷயம் தெரிந்தவர்கள் வேலுடன் கோவிலுக்கு செல்வார்கள் . அதிமுக்கியமான "அன்னையிடம் வேல் வாங்கும்" நிகழ்வை காண . கோவிலை வலம் வந்த வேல் ,மூடி இருக்கும் தெற்குவாசல் பெரிய மரக்கதவின் முன் வந்து நிற்கும் . அத்தனை நாளும் சம்பந்தமே இல்லாமல் எதற்கு இப்படி ஒரு கதவு என்று ! யோசித்தவர்களுக்கெல்லாம் அப்போது புரியும் . அந்த கதவு அமைக்கப்பட்டதே இதற்காகத்தான் என்று . வீரவாகுவான K.K.S- திரிசூலத்தை மூடிய கதவின் மேல் வைத்து நிற்பார் . வேல் பாட்டு பாடுபவர் தனது மொத்த வித்தையையும் அங்கு காட்டுவார் . உத்வேகமான பாடல்களை ஒரு 15 நிமிடம் பாடுவார் . சபாஷ் கோஷம் உச்சத்தில் இருக்கும் . அதேபோல அந்த 30 நிமிடங்களில்தான் கோவிலின் உச்சக்கட்ட கொள்ளளவிற்கு மக்கள் உள்ளே நிற்பார்கள் . எப்படி சமிக்கை கொடுப்பார்கள் என்று தெரியாது . கதவு உள்ளிருந்து திறக்கும் . ஆட்டுக்கிடா வாகனத்தில் ஆர்ப்பரிக்க அமர்ந்திருக்கும் முருகருக்கு மஹா தீபாராதனை காட்டப்படும் . பெரும் சிலிர்ப்பை தரும் அந்த நிகழ்வில் கதவு தானாகவே திறப்பதாக சிறுவயதில் நம்பிக்கொண்டிருந்தேன் . அவ்வளவு தத்ரூபமாக அதை நிகழ்த்துவார்கள் .


   முருகனை ஒரு பால்வடியும் குழந்தையாகவே நம்மிடம் பலர் முன்னிறுத்தினாலும் . அவர் தோன்றியதே போர் செய்யத்தான், அவர் ஒரு போர் வீரர் என்பதாகத்தான் கந்தபுராணம் காட்டுகிறது . "பெரும் சேனையை வழிநடத்துபவன்" என்று பொருள்படும் "மஹாஸேனாய" என்ற பெயருக்கும் தேவர்களின் சேனைக்கு அதிபதி என்று பொருள்படும் "தேவசேனாபதி " என்ற பெயருக்கும் ஏற்றார் போல அன்றொரு போர் வீரனாக காட்சிகொடுப்பார் . முருகனை எடுத்துக்கொண்டு உலகநாயகி சன்னதிக்கு செல்வார்கள் . திரை மூடியிருக்கும் அங்கு முன்னுக்கும் பின்னுக்கும் வந்து வந்து செல்லும் முருகனும் வேலும் . திரை விலகி ஆராதனை காட்ட , சக்தி வேலுடன் பெரியய்யா வந்த வேகத்தில் கொடுத்துவிட்டு மூர்ச்சையாகிவிடுவார் . வேலை ஆட்டு கிடாயின் தலையில் வரிந்துக்கொண்டு . புறப்பட தயாராக . வேண்டுதல்கள் உள்ள பலர் முடியாத பெரிய மாலைகளை சூடுவார்கள் . அந்த நேரத்தில் வேண்டுதல் செய்துகொண்டு மாலை சூடுவது எண்ணியதை நிறைவேற்றும் என்றொரு நம்பிக்கை . வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக சம்கார களத்திற்கு செல்வார் .

    இவ்வளவு விஷயங்கள் இங்கு நடந்திருக்க களத்திற்கு முன்னமே சென்றிருந்த சூரன் எப்பயா இவன்க வருவான்க! என்ற கணக்காய் இளைப்பாறும் பந்தலில் நின்றிருப்பார் . இளைப்பாறும் பந்தல் தெற்கு வடக்காக இருக்கும் நீண்ட களத்தில் ஒரு 20 அடி உயர்ந்த பந்தலாய் தென்னன்ட மூலையில் அமைக்கப்பட்டு மேலே ஒரு இழுவை விசிறி பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் . பின்னே அந்த விசிறியை யாராவது இயக்கிக்கொண்டிருப்பார்கள் . இரு மருங்கிலும் காத்துநிற்கும் மக்கள்கூட்டத்தின் காதில் சன்னமாய் "சபாஷ் " ஒலி கேட்க ஆயத்தமாவார்கள் . உதாரணத்திற்கு திடீரென்று வீட்டில் அறைக்கதவை நாம் திறக்கையில் உள்ளே அகப்பட்டுக் கொண்டதொரு பூனை ,அது வெளியேற ஒரே வழி நாம் நிற்கும் அந்த கதவுதான் என்கையில் .எப்படி அடித்துபிடித்து வெளியேறும். அதுபோன்றதொரு சிக்கல் சூரனுக்கு தெற்கு மூலையில் இருக்கும் அவர் வடக்கு பக்கம் செல்லவேண்டும் .வடக்கிலிருந்து முருகனும் வேல்வீரர்களும் வேகமாக வந்துகொண்டிருக்க . அவர்களை நேருக்கு நேர் சந்தித்தே ஆகவேண்டிய இக்கட்டு இவருக்கு . அவர்கள் வந்த வேகத்திற்கு இவர் வேகமாக முன்னேற ஒரு பெரும் உரசல் நிகழ்ந்து தப்பி வடக்கு நோக்கி சென்றுவிடுவார் . இந்த சமயம் கூட்டத்தின் மேல் சூரனை போட்டுவிடும் நிலைகூட சிலமுறை நிகழ்ந்ததுண்டு .


   சென்றவர்கள் ஆனைமுக சூரனின் தலையில் ஆணி அடித்து பெரும்பலத்தோடு திரும்பிவர . முதல் தலை எடுக்க பிரம்ம பிரயத்தனம் மேற்கொள்ளவர் வேல் வீரர்கள் . தலையை கொடுக்கக்கூடாது என்பதில் சூரன் தரப்பு உறுதியாக இருக்கும் . அந்த நேரத்தில் பெரிதாக என்ன நடக்கிறதென்று தெரியாது வேல் வீரர்கள் சூரனை தொடர்ந்து ஓடுவார்கள் , திரும்பி வருவார்கள் . மக்களெல்லாம் எடுத்தாச்சா ! எடுத்தாச்சா !என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வர் . ஒருவழியாக 30-40 நிமிட போராட்டத்திற்கு பிறகு தலையை வேல் வீரர்களில் ஒருவர் எடுப்பார் . முதல் தலையை கொய்தவர் இளைப்பாறும் பந்தலில் பார்த்துக்கொண்டிருக்கும் முருகனின் காலடியில் வைப்பார் . அந்த 40 நிமிடமும் ஏறக்குறைய ஒரு கால்பந்து போட்டியின் சுவாரஸ்யாம் இருக்கும் . அந்த தலை கொய்தவரை "கோல்" போட்டதுக்கு இணையாக கொண்டாடுவர். எனக்கு தெரிந்து அதிகமான முறை அப்படி தலை கொய்தவர் கவி அண்ணன் . இரண்டாவது ஆடு முகம் அது அதிகபட்சம் 10 நிமிடங்களில் கொடுக்கப்படும் . இறுதியாக மாமரத்தில் மறைந்ததை உணர்த்த ஒரு மாமர கிளை பொருத்தி வரும் சூரபத்மனின் தலையை எடுக்க தேவசேனாபதியே நேரடியாக களத்துக்கு வருவார் . மேலே அமர்ந்திருக்கும் அர்ச்சகரே கையாலே அந்தத்தலையை எடுத்துவிடுவார் . அதோடு சம்பாரம் நிறைவுற்று எல்லோரும் வீடு திரும்பினாலும் நமக்கு பெரிய பலூனும் கல்லைகடையில் உப்புக்கல்லையும் வாங்கிக்கொடுத்தால்தான் நிறைவுறும் .அன்று இரவும் வேல் ஊர்வலம் ஆடு வாகனத்தில் வாகை சூடிய முருகரோடு நிகழும் . அன்று இரவு அவருக்கு போர் களைப்பு போக்க ரசம் சாதம் பிரசாதமாக படைக்கப்படும் என்று கேள்விப்பட்டதுண்டு . அடுத்தநாள் காலை வரை அந்த பலூன் தங்கினால் அதிசயம் . சம்பாரம் பார்க்க வராத பெருசுகள் யார்ரா தலையெடுத்தா ? என்று முதல் நாள் மேட்சின் ஸ்கொர் கேட்பது போல கேட்டுக்கொண்டிருப்பார்கள் .



     மறுநாள் காப்பு அவிழ்ப்பதும் பின் வள்ளித்திருமணமும் நடைபெறும் . எங்கள் பகுதியில் திருத்துறைப்பூண்டி , வலிவலம் மற்றும் புகழ்பெற்ற எட்டுக்குடி & சிக்கல் போன்ற ஊர்களில் கந்தசஷ்டி நடைபெற்றாலும் . மணக்குடி சூரசம்ஹாரம் பிரசித்திபெற்றது . காரணம் மாற்ற ஊர்களில் அந்தந்த கோவில்களால் அந்த விழாக்கள் நடத்தப்பட இங்கு கிராமவாசிகளே முனைப்போடு எடுத்து நடத்துவது. இந்த ஆண்டும் சம்பாரம் நடைபெறுகிறது காப்புக்கட்ட ஆள் 9க்கு குறைவாய் விருப்பம் தெரிவித்திருப்பதாக சொன்னார்கள் . ஆச்சர்யமாய் இருந்தது . காரணம் ஒரு காலத்தில் 12-15 பேர் காப்புக்கட்ட விருப்பம் தெரிவித்து வந்துவிட என்ன செய்வதென்று தெரியாமல் (எண்ணிக்கை 9 என்பதை மாற்ற முடியாது ) , சுப்ரமண்யர் சன்னிதியில் சிட்டில் பெயர் எழுதி 9 பெயரை தேர்ந்தெடுப்பர் . திருமணத்திற்கு முன் ஒரு முறையாவது வேல் தூக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கையும் கிராமத்தில் இருந்தது . ஒரு வேளை பக்தி குறைந்துவிட்டதா ! என்றால் அதுவும் இல்லை . கடுமையாக 40 நாள் விரதமிருந்து பழனிக்கு ஊரிலிருந்து நடந்தே செல்லும் ஒரு யாத்திரைக்குழு கடந்த பத்துவருடங்களாக சிரத்தையோடு இருக்கிறார்கள் . அப்படி இருக்க ஏன் இந்த விரதத்திற்கு தயங்குகிறார்கள் என்பது புரியவில்லை.


   திரைப்படங்களுக்கு முன்னோடி நாடகம் நாடகத்துக்கு முன்னோடி கூத்துகள் என்று சொல்வார்கள் அந்த கூத்திற்கும் முன்னோடி இதுபோன்ற விழாக்கள்` மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த கதையும் , காரைக்கால் மாங்கனி விழாவும் ,திருசெங்காட்டாங்குடி பிள்ளைக்கறி கதையும் இன்றும் விழாவாக நடத்தப்படுகின்றன .புராணத்தை என்னதான் வாசித்தாலும் ் புரியாத விஷயங்கள் , கண்முன்னே நிகழ்வுகளாய் நிகழ்த்த அப்படியே நம் மனதில் பதிகிறது. நான் சம்பாரம் பார்த்து ஒரு 12 வருடங்கள் ஆகிறது . இவையெல்லாமே நினைவடுக்கிலிருந்து மீட்டவை , அந்த அளவுக்கு அவை பதிந்து விட்டன . 

No comments:

Post a Comment