Wednesday, 22 August 2018

கல்வியே ஆயுதம் - Abdul Ghaffār Khān

சுய சரிதங்களை வாசிப்பது எப்போதும் சுவாரஸ்யமானது , ஏட்டினை திறந்தவுடன் எங்கிருந்தோ வந்து அருகில் அமர்ந்துவிடுகிறார்கள் . அவர்களின் வார்த்தைகள் நம் மீது பட்டுத்தெறிப்பதை உணரமுடிகிறது . உண்மைக்கு மிக அருகில் நின்றுகொண்டு அவர்கள் கதைப்பதால் அதை காது கொடுத்து கேட்பதற்காகவாவது அந்த சில தருணங்கள் நாமமும் உண்மைக்கு அருகில் செல்லவேண்டி இருக்கிறது .

(Abdul Ghaffār Khān "எனது வாழ்வும் போராட்டமும்" வழியாக கதைத்துக்கொண்டிருக்கிறார் )



1890- சிந்து பகுதி பஷ்ட்டு பழங்குடி இன மக்கள் நிறைந்த நிலப்பரப்பு . மதவாதிகளால் அந்த மக்களின் கல்வி கற்பது தடுக்கப்படுகிறது . அதை மீறுபவர்கள் கடவுளுக்கு எதிரானவர்களாவார்கள் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது . அந்த நிலையில் அங்கு ஜமீனை போல வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி தன் மகன்களை பள்ளிக்கு அனுப்புகிறார் . அதில் இளையவர் கபர் கான் . தன்னோடு துணைக்கு இருந்த தாத்தா சொன்ன ராணுவ கதைகள் அவரை கவர்கிறது . வருங்காலத்தில் ராணுவத்தில் சேர்வதே லட்சியமாக கொள்கிறார் . ஓரளவு கல்வியும் தாட்டியமான உடல்வாகும் கொண்டவர் என்பதால் எளிதாக அந்த கனவு நிறைவேறுகிறது . ஆனால் அங்கும் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை பாகுபாடுடன் நடத்துவதைக்கண்டு மனம் வாடுகிறார் . ராணுவத்திலிருந்து விலகுகிறார். தனக்கு இப்படி பகுக்கும் அறிவை கொடுத்த கல்வியை தன் மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்று
எண்ணுகிறார் .

கடவுளின் பெயரால் அச்சுறுத்தப்படும் மக்களிடம் பேசி புரிய வைப்பது அவருக்கு பெரும் சவாலாக இருக்கிறது . கிராமம் கிராமமாக அலைகிறார் கூட்டங்கள் நடத்துகிறார் . சில பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார் .ஆசிரியர்கள் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது . கிடைத்தாலும் அவர்களை அச்சுறுத்தி துரத்துக்கிறது ஆங்கிலேய அரசு . எதையும் பொருட்படுத்தாது பள்ளிகளை திறக்கிறார் .

அரசின் ஆட்கள் அவருடைய தந்தையை அணுகி மென்மையாக மிரட்டுகின்றனர் .உங்களிடம் உள்ள சொத்துகளே எவ்வளவு! அதை பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கவேண்டியதுதானே . ஊரில் உள்ள எல்லோரும் அமைதியாய் வீட்டில் இருக்க உங்கள் மகன் மட்டும் ஏன் இப்படி பொது விவகாரங்களில் ஈடுபடுகிறான் . இனி கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வது , கூட்டங்கள் நடத்துவதெல்லாம் நிறுத்திக்கொள்ள சொல்லுங்கள் .உங்கள் மகன் என்பதால் உங்களிடம் வந்து பேசிக்கொண்டிருக்கிறோமென்று சொல்லிவிட்டு செல்கின்றனர் .

மகனிடம் பெரிதாக எதையும் அதுவரை கேட்டிராத தந்தை, அவர்கள் சொல்வதும் வாஸ்தவம்தானே. இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளேன் என்கிறார் . நாம் இறைவனுக்காக தினம் படிக்கும் குரானை நாளை முதல் படிக்காதீர்கள் என்று யாரவது சொன்னால் ! நீங்கள் என்ன செய்வீர்கள் ? கேட்கமாட்டேன் அது இறைவனுக்கும் எனக்குமானத் தொடர்பு அதை துண்டிக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்கிறார் தந்தை . அதே போன்றதொரு பணியைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன் . நான் அதை நிறுத்த வேண்டுமா ? .அடுத்த நாள் பரிவாக மகனிடம் பேசும் தந்தை நீ இறைவனுக்கு அஞ்சுபவன் என்பது எனக்கு தெரியும் . உன் இஷ்டப்படி செய் என்கிறார் .

கான் தன் நிலையிலிருந்து மாறமாட்டார் என்பதை புரிந்துகொண்ட அரசு . கைது செய்து சில காலம் சிறையில் வைக்கிறது . கடுமையாக நடத்துகிறது எதற்கும் மசியமாட்டார் என்பதை உணர்ந்துகொண்டவர்கள் 3 ஆண்டுகளாக தண்டனையை உயர்த்துகின்றனர் .வெளிச்சமே வராத சிறைச்சாலை தரும் குளிர் அவரை வாட்டுகிறது . சிறையில் கொடுக்கப்படும் மாவு அரைக்கும் வேலையை செவ்வனே செய்கிறார் . கொடுமையான தண்டனைகள் இருந்தாலும் அதை பெரிதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து அவரை விடுவிக்க வேண்டிய நேரம் வருகிறது . தங்களுக்காக தன்னையே ஒப்புக்கொடுத்துவிட்ட அவரை சிறையிலிருந்து சிறப்பான முறையில் வரவேற்று சென்று , ஒரு விழா எடுக்க மக்கள் முடிவு செய்திருப்பதாக உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைக்கிறது.

அவர் ஒரு தலைவராக உருவெடுப்பதை அரசு விரும்பவில்லை எனவே இரண்டு நாட்கள் முன்கூட்டியே அவரிடம் எதுவும் சொல்லாமல் அழைத்துச் சென்று அவரது பகுதியில் ஒரு இடத்தில இறக்கிவிட்டுவிட்டுவிட்டு செல்கின்றனர் .அந்தி நேரம் மெதுவாக நடக்கத்துவங்குகிறார் அவர் துவங்கிய ஒரு பள்ளியிலிருந்து பிள்ளைகள் வெளியேறுகின்றனர் . சிலர் இவரை அடையாளம் கண்டுகொண்டு வேகமாக ஓடி வருகின்றனர் "பாஷா" "பாஷா" என்று கானை சூழ்ந்து கொள்கின்றனர் . அவர் கண்கள் பனிக்க சிரிக்கிறார். தான் எந்த லட்சியத்தை நோக்கி பயணிக்கிறோமோ அதன் விளைச்சல்கள் தன்னை அரவணைத்து நிற்பதை கண்டு குதூகலிக்கிறார் . இணையற்ற அப்படியான சிறந்ததொரு வரவேற்பு தானாக நிகழ்கிறது . தலைவராக அவர் உருவெடுத்து வெகுகாலமாகிறது என்பது அரசுக்கு விளங்க சில காலம் பிடித்தது . கானின் ஆரம்பகால போராட்டங்கள் மக்களுக்கான கல்வியை முன்னெடுப்பதற்காகவே இருந்திருக்கின்றன . கல்வியே சுதந்திரத்திற்கான பெரும் ஆயுதம் என்பதை ஆரம்பத்திலேயே அவர் உணர்ந்துவிட்டார் .

(பிற்பாடு மக்களுக்காக கான் வெவ்வேறு காலகட்டங்களில் தன் வாழ்நாளில் 37 ஆண்டுகாலத்தை சிறையில் கழித்தார் )

#எல்லை_காந்தி
#The_Frontier_Gandhi
#Badshah_Khan
#Bacha_Khan
#Abdul_Ghaffār_Khān

No comments:

Post a Comment