கிராம "savior"
சிறுவயதில் பள்ளி விடுமுறை ஒரு பொருட்டே அல்ல . டியூசன் விடுமுறையாக இருந்தால்தான் மகிழ்ச்சி .ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக மிகக்குறைவே . காரணம் ,என்ன இடி இடித்தாலும் மழை பெய்தாலும் டியூஷன் இருக்கும் . காலை & மாலை என்று இரு வேளையும் உண்டு . அது கிராமசேவர் நடத்தும் ட்யூஷன் , அதுஒரு அணையாவிளக்கு. கிராமத்து பிள்ளைகள் பைகளை சுமந்துக்கொண்டு கிராமத்தின் தென் திசை நோக்கி நடப்பர் .கிராமத்தின் தென்முகக்கடவுள் அங்குதான் வீற்றிருப்பார். "கிராமசேவர்" என்று மக்களால் விளிக்கப்பட்டாலும் அவர் "கிராமசேவகர்" என்ற பணி நிமித்தம் ஊருக்கு வந்து பின் முழுதாக ஊர்க்காரர் ஆகிப்போனவர் . பலருக்கு இன்றும் அவர் பெயர் தெரியாது , கிராமசேவகர் என்றால்தான் விளங்கும். அவரது உண்மையான பெயர் வெங்கடேசன்.
சுமார் 50 வருடங்களுக்கு முன் காவேரியின் கடைமடைப்பகுதியான எங்கள் கிராமத்திற்கு அன்றைய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியாக வெங்கடேசன் வந்து சேர்ந்தார் . இன்றைய கிராம நிர்வாக அலுவலருக்கு இணையான பதவி அது . கிராமத்தில் மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்வது , காலரா போன்ற நோய்களின் தன்மை மற்றும் அது பரவுவது பற்றிய சரியான புரிதலை மக்களிடம் கொண்டுவருது போன்றவையே அந்த பதவியின் முக்கிய பணிகள் . பிற்காலத்தில் எப்படி அவர் டியூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார் என்று தெரியாது . 70 துகளிலிருந்து இந்த பணியை செய்துவருகிறார் .
அந்த டியூஷன் என்பது இப்போது இருப்பது போல ஷிப்ட் முறையில் யார் மாணவன் என்பதே தெரியாமல் வந்து கடைமையை முடித்து செல்லும் ஆசிரியர்கள் நிறைந்தது போல அல்ல .ஒவ்வொரு மாணவனின் படிப்பார்வத்தின் நீள அகலம் தெரிந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கவனம் செலுத்துவார் . நான் 92-95 காலகட்டங்களில் அங்கு படிக்கும் வாய்ப்பு அமைந்தது . அது நான்கைந்து அரசு காலனி வீடுகள் நிறைந்த பகுதி .ஊரின் தென் எல்லையில் வேப்ப மர நிழல் சூழ அமைதியாக இருக்கும் .டியூஷன் செல்கையில் எதிர்ப்படும் குறவன் கோவிலின் அமானுஷ்யமும் தைல மர வாசமும் எங்கோ ஒரு புது நிலப்பரப்பில் நுழையும் அனுபவத்தை ஒவ்வொருமுறையும் கொடுக்கும் . எப்போது போனாலும் மரத்து நிழலில் குழு குழுவாக வகுப்பு வாரியாக பிரிந்து ,கொடுக்கப்பட்ட பாடங்களை படித்துக்கொண்டிருப்பது மந்திர உச்சாடனம் உருகொட்டுவதைப் போல ஒத்திசைவாய் காதுகளை வந்து முட்டும் . அந்தக்கால குருகுலம் போன்றே தோற்றமளிக்கும். மையமாக துரோணர் போல அமர்ந்திருப்பார் கிராமசேவர். உண்மையில் அவர் எங்கள் கிராமத்தின் துரோணர்தான், ஆனால் கட்டைவிரலை காணிக்கை கேட்காத துரோணர் , அவர் எவரிடமும் பாகுபாடு பார்த்ததே இல்லை . அன்றைய தேதிக்கு டியூஷன் பீஸ் மாதத்துக்கு 10 ரூ , அதையும் கறாராக வாங்கமாட்டார் .
வெற்றுடம்புடன் வேட்டி மட்டும் தரித்து கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பார். நாம் நம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து ஒரு அரைமணிநேரம் அன்றைக்கு அவர் குறிப்பிட்ட பாடத்தில் இதையெல்லாம் கேட்பார் என்று படித்திருக்க . நாமக்கு தெரியாத கேள்வியை சரியாக கேட்டு நம்மை சிக்க வைப்பார் . அவர் சொல்லிக்கொடுத்த அடிப்படை ஆங்கில இலக்கணமும் & கணிதமும் அப்படி இறங்கும் நம் மனதில். பிற்காலங்களில் பல கடுமையான பாடங்களுக்கு அதுதான் பாலபாடம் என்பது அப்பொது தெரியாது .அவர் அடித்ததே கிடையாது அதிகபட்சமாக "உன் பொண்டாட்டிய நண்டு கடிக்க " என்று திட்டுவார். அத்தகைய சமயங்களில் எல்லோரும் "கெக்கே பிக்கே" என்று சிரித்து அடங்குவது பின்னணியில் கேட்கும் .
பூஜை புனஸ்காரங்களில் அதிகம் ஈடுபாடு உடையவர் .அவர் வீட்டில் அடிக்கடி ஏதேனும் ஒரு பூஜை நடந்துக்கொண்டே இருக்கும் . அதுபோன்ற சமயங்களில் டீச்சர் (அவர் மனைவி ) சிறு பாத்திரத்தில் பிரசாத்தை எடுத்துவந்து சிறு கரண்டியால் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார் . எப்படி இந்த சிறு பாத்திரத்திலிருந்து வந்துகொண்டே இருக்கிறது என்று சிறுவயதில் யோசித்ததுண்டு . அது மணிமேகலையின் அட்சயபாத்திரம் போல அல்ல அல்ல குறையாது . அனைவருக்கும் அளவாக கொடுக்கப்படும் .
எங்கள் கிராமத்தில் கல்வி பற்றிய ப்ரக்ஞையை மக்களிடம் விதைத்தவர் அவர் . அந்த காலங்களில் கிராம மாணவர்கள் படிக்க ஏதுவான வசதி வீடுகளில் இருக்காது . மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான ஏதுவான சூழலை அமைத்து கொடுத்தார் . சில அற்புதங்களை நிகழ்த்த முடியாது நிகழ்வதற்கான சூழலை ஏற்படுத்தினால் போதும் என்பார்கள் . அந்த சூட்சமத்தை புரிந்த மாமனிதர் அவர். அவர் ஏற்படுத்திக்கொடுத்த சூழலை பயன்படுத்தி அற்புதமாக வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள் பலர் . எனக்கு பாலச்சந்தரின் உன்னால் முடியும் தம்பி உதயமூர்த்தியை பார்க்கும் பொது அவர் ஞாபகம் வரும் . அந்த கதாபாத்திரம் செய்த சில செயல்களை அவரின் எல்லைக்குட்பட்டு செய்திருக்கிறார் . இப்பொழுது ஏறக்குறைய 85-90 வயது இருக்கும் அவருக்கு , ஊர் பேர் தெரியாத ஒரு கிராமத்திற்கு இப்படி தன் வாழ்நாளையே கொடுக்கும் மனம் எப்படி ? ஒருவருக்கு வந்தது என்பது இன்றும் என்னுள் இருக்கும் கேள்வி . மணக்குடியில் பிறந்து கிராமசேவரிடம் கல்வி கற்காதவர்கள் மிகக்குறைவு . அது ஒரு நாற்றாங்கால் அவர் ஊற்றிய உயிர் தண்ணியும் உரமும் கொண்டு உரு பெற்ற மரங்கள் உலகின் பல மூலைகளில் இன்று நிழல் பரப்பிக்கொண்டிருக்கிறன்றன . அவர் அமைதியாக தன் அந்திமக்காலத்தை அதே கிராமத்தில் கழித்துக்கொண்டிருக்கிறார் . அவர் எப்படி அந்த " கிராம சேவகர்" அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்று தெரியாது . ஆனால் அந்த பெயருக்கு தகுந்தாற்போல எங்கள் கிராமத்திற்கு அவர் செய்த சேவை அளப்பெரியது . மக்கள் அவரை விளிப்பது போல அவர் எங்களின் கிராம "savior " .
No comments:
Post a Comment