வயது வந்தவர்களுக்கு மட்டும்
ஏதோ ஒன்றின் இருப்பு தேவையற்று போகும்போது , கண்ணனுக்குத் தெரியாத ஒரு மாய கண்ணியிலிருந்து அவை விடுவிக்கப்பட்டு அற்றுப்போகும் , என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு படி என்பர். அது போலவே கலை , இலக்கியங்களிலும் நிகழ்கின்றன, தேவையற்றவை அற்று போகின்றன . இந்த பாலியல் கதைகளும் அப்படியே ் கையடக்க கதைச்சொல்லிகள் வந்துவிட்ட காரணத்தால் அந்த கண்ணியை விட்டு விலக முற்பட்ட தருணத்தில் , அதை தடுத்து நிறுத்தி நித்யமாக விளங்க பதிவு செய்திருக்கின்றனர் கிராவும் கழனியூரானும்.
எத்தனை மனிதமனங்களை தாண்டி பயணப்பட்டு வந்திருக்கும் அந்த கதைகள் . இவர்கள் இந்த முயற்சியை எடுக்காமல் இருந்திருந்தால் அவை காற்றோடு கலந்திருக்கும் . தளபதியாய் கழனியூரன் சேகரிக்க கிரா தொகுத்திருக்கிறார் . ஆரம்பக்காலங்களில் சில தொகுப்புகளுக்கு தெக்கத்தி கிராமங்களில் அலைந்து திரிந்து சேகாரம் செய்தவற்றை கிராவிடம் கொண்டுவந்து கொடுக்க . சரியாக சில இடைச்செருகல்களை கண்டுபிடித்துவிடுவாராம் . என்னயா சொந்த சரக்க சேர்த்துட்டியா? என்று குறும்பு சிரிப்பு சிரிப்பாராம். எப்படி கண்டு பிடிசீங்க என்று இவர் கேட்க . துருத்திட்டு தெரியுதய்யா . மக்களின் கதை இயல்பா இருக்கும் பாண்டித்யத்த உள்ள வைக்கமாட்டாங்க என்பாராம் . பின் கிடைத்ததை மட்டுமே அவரிடம் கொடுக்க ஆரம்பித்தாராம் அவர் .
இந்த பாலியல் கதைகளில் சிலவற்றை நாம் பள்ளிக்காலங்களில் கடந்து வந்திருப்போம் . முன்னுரையில் அவர் சொல்வது போல உறவுகள் எல்லாம் பின்னே முளைத்தவை எல்லாவற்றிற்கும் முந்தியது இவை . எனவே கலாச்சார & உறவு கட்டுமானங்கள் இல்லாத காலத்திய கதைகள் என்ற பிரக்ஞையோடு கதைகளை அணுகவேண்டி இருக்கிறது . பெரிதாக படிப்பறிவு இல்லாமல் இருந்த அந்தகால மக்களுக்கு பாலியல் விஷயங்களை & பாலியல் சிக்கல்களை எளிதில் புரியவைக்க இவை நிச்சயம் ஆகச்சிறந்த கருவியாய் உதவியிருக்கும் .
ஒவ்வொரு கதையையும் படித்துவிட்டு இது எந்த விஷயத்தை பேசுகிறது என்று யோசிக்க வேண்டி இருந்தது . எல்லா கதைகளும் படித்துவிட்டு எளிதாக கடந்துவிடக்கூடியதாக இருந்தாலும் இரண்டு கதைகள் மறக்கமுடியாத அளவிற்கு திண்மையாக இருந்தது . ஒன்று அண்ணியின் சாபம் வாங்கி குழந்தை இல்லாமல் , அண்ணி தரும் விமோச்சனத்துக்காக காத்து நிற்கும் ஒருத்தனின் கதை அந்த கதையில் ஒருவித புராண அம்சம் மிளிர்ந்தது . அடுத்து அந்த கிறுக்கு ராஜா கதை . எல்லாரும் அவனை ஒரு காமுகனாக சித்தரிக்க . அந்த முடிவு ஒருவித ஆன்மிக நிலையை பற்றி விவாதித்தது . படம் முழுதும் காமமும் வன்முறையும் வியாபித்து இருந்தாலும் இறுதியில் அறத்திற்கு இட்டுச்செல்லும் கிம்-கி-டுக் படம் பார்த்த உணர்வைக்கொடுத்தது அந்த ஒன்றரை பக்க கதை .
சாதாரணமாக கதைகள் எழுத்தாளரின் மனதில் வியாபித்து எழுத்துருவாகும் பின் மக்களின் மனதில் புழங்கும் , அதற்கு மாறாக இந்த கதைகள் மக்களின் மனங்களில் புழங்கி ஒரு மேதமை எழுத்தாளரால் எழுத்துருவாக்கப்பட்டுள்ளது . இன்றைய சூழலில் இந்த கதைகளின் தேவை என்ன என்றெல்லாம் யோசிக்க தோன்றவில்லை, பாலியல் சிக்கல்களின் விகாரங்களை வெளிச்சமிட்டு காட்டி விவாதித்த ஒரு படிப்பறிவு இல்லாத பண்பட்ட சமூகம் வாழ்ந்திருக்கிறது என்பதற்கு சான்றாக நிற்கின்றன இந்த கதைகள் . அடிப்படையிலேயே ஆவணப்படுத்தலில் நாம் பெருமளவில் பின்தங்கி இருக்கும் வேளையில் . இது போன்ற பணிகள் மிக முக்கியமானது . தஞ்சை மண்ணில் புழங்கிய மக்களின் கதையை தஞ்சை நாடோடிக்கதைகள் என்று ஒரு தொகுப்பாக தஞ்சை பிரகாஷ் ஆவணப்படுத்தியிருக்கிறார் .பெரும் ஆளுமைகளுக்கு இது போன்ற தொன்மங்களை ஆவணப்படுத்துவதின் அவசியம் மற்றும் அவசரம் புரிந்திருக்கிறது .
வயது வந்தவர்களுக்கு மட்டும்
(நாட்டுப்புற பாலியல் கதைகள் )
தொகுப்பு : கி.ராஜநாராயணன் & கழனியூரான்
பதிப்பகம் :அகரம் பதிப்பகம்

No comments:
Post a Comment