அந்த நபரின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நாம் அறிந்திருப்போம் . எப்போது நடந்தது ,என்ன நடந்தது என்பது நமக்கு நன்றாக தெரியும் . அதை எப்படி நடத்தப்போகிறார் இயக்குனர் என்பதில்தான் தனிமனித சரிதங்களை படமாக்கும் சவால் இருக்கிறது.
எளிமையாய் தொடங்கியப்படத்தில் முழுக்க முழுக்க அவரின் அருமை பெருமைகளை மட்டும் சொல்லி நம்மை தொந்தரவு செய்யாமல் . ஹார்டி - ராமனுஜத்திற்கான உறவின் குறுக்குவெட்டை சொல்லி ,அதைச்சுற்றி அவரின் கதையை கொண்டு சென்றது சிறப்பு .
கணிதப்புதிர்களுக்கு விடைகளை கொண்டுவந்துவிடும் ராமனுஜத்தால் அது எப்படி வந்தது என்ற வழிமுறைகளை கொண்டுவரமுடியவில்லை. அது இல்லாமல் இவர்கள் எதையும் நம்பமாட்டார்கள் அதை கொண்டுவரும் வழியைப்பார் எனும் ஹார்டியிடம் எனக்கு விடைகள் மட்டுமே தெரிகின்றன என்ன செய்ய? என்று அப்பாவியாய் கேட்கும் ராமனுஜத்தை . வா என்னோடு என்று லண்டன் மியூசியத்திற்கு அழைத்து செல்பவர் திறந்த ஏடு இருக்கும் ஒரு கண்ணடிப்பேழைக்கு முன் நின்று, இது நியுட்டனின் கைப்பிரதி, இன்று இதில் சில விஷயங்களை யாராலும் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு நிச்சயம் தெரியும் இதற்கு பாக்கத்தில் வைப்பதற்கு நிகரானது உன் பிரதி . தயவு செய்து பின்வரும் பலருக்கு இதே போன்ற சிரமத்தைக்கொடுத்துவிடதே என்று சொல்லிவிட்டு . பதிலை எதிர்ப்பார்க்காமல் செல்வார் .(பின் அந்த இரண்டுமே நடந்தது ) இந்த நிகழ்வுக்கு பிறகு கொஞ்சமேனும் படிநிலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு முயற்சிக்கிறார் ராமனுஜன்.
அந்தக்காலத்தில் அடிமைப்பட்டிருந்த இந்தியாவிலிருந்து வந்த ஒருவனின் திறமையையை கண்டுக்கொண்டு அதை எப்படியாவது உலகிற்கு நிருபிக்க வேண்டும்மேன்று ஹார்டி எடுக்கும் சிரத்தைகள் நெகிழச்செய்கிறது.
ஆங்கிலேயர்கள் எல்லோரும் நமக்கு வைரிகள் என்று ஆரம்பப்பள்ளியில் படித்தவை யாவும் உண்மையில்லை என்பது பின் நாட்களில் பலவாறு புரிந்தது . குறிப்பாக முல்லை பெரியார் ஆணை கொடுத்த John Pennycuick , தமிழ் மொழியின் மேன்மையை வெளியே காட்டிய - Robert Caldwell , தமிழின் வனப்பை உலகிற்கு எடுத்துச்சொன்ன G.U. Pope போன்றோர் . செய்திருக்கும் சேவை மிகப்பெரியது , இவர்கள் இருந்த திசைநோக்கி நமஸ்கரிக்கலாம். இன்று அந்த பட்டியலில் G. H. Hardy-ம் சேர்ந்துகொண்டார் . இன்னும் கொஞ்ச காலம் ராமனுஜன் இருந்திருந்தால் இந்த கூட்டணி எவ்வளவு அவிழ்க்க முடியாத கணித முடிச்சுகளை அவிழ்த்திருப்பார்கள் ! என்ற ஏக்கத்தை நம்மிடம் விட்டு செல்கிறது படம் .

No comments:
Post a Comment