Friday, 8 December 2017

   மகரந்த ஒளி உமிழும் மெழுகு விளக்குகளும்
மேசைக்கரண்டிகளின் முத்தங்களும்
சூழ் வெளியில் , நம் நட்புகளுக்கிடையே நீ இருக்க .
பரிசுபெட்டகத்தோடு நெருங்கினேன் .
நம் கண்களின் சந்திப்பை மௌனச்சிரிப்போடு
எல்லோரும் எதிர்நோக்கிக்கொண்டிருக்க !
பரிசை உன்னிடம் சேர்ப்பிக்கையில் -நம்முள்
ஊடுருவிய நம் கண் பார்வைகள் உடைபடாமல்
ஒரு வாழ்த்தை உமிழ்ந்தேன் அனிச்சையாய் .
அவள் காத்திருந்த அதிமுக்கியமான பரிசு
இதோ ! என்றாள் தோழி .
  அதற்குள் அங்கிருந்தவர்களில் ஊகங்ள்
உருக்கொள்ளத்தொடங்கின .
iphone x என்றான் ஒருவன் .வைர நகையாக
இருக்குமோ என்று நகைத்தாள் ஒருத்தி .
பரிசின் உடை உதிர்க்கையில்
எதிர்பார்ப்பு எதிர்ப்படும் உன் மின்னும்
கண்ணின் ஒளி என்னுள் அழுத்தத்தை கூட்டியது.
மழைக்காலத்தில் மொத்தமாய் அணையும்
மாநகர விளக்குகளைப்போல
எல்லாம் அவிழ்ந்து எதிர்ப்பட்டது ,
அணைத்தது அனைவரது பிரகாசத்தையும் .
ஊரே அணைகையில் மெருகேறும்
நிலவை ப்போல கூடியது உன் ஒளி .
என்றோ கதைக்கையில், நீ விரும்பியதாய் சொன்ன
மலிவானதொன்றை பொதித்து வைத்திருந்தேன் .
கண்களால் சிரித்துக்கொண்ட நமக்கு மட்டுமே
தெரியும், நான் கொடுத்தது பொருளை அல்ல
நமக்கே நாமக்கான அந்த நினைவை என்று !

No comments:

Post a Comment