தாத்ரிகுட்டியின் ஸ்மர்த்த விசாரம் பற்றிய ஒரு Face book- பதிவே . இந்த புத்தகத்தை நோக்கி தள்ளியது . புத்தகத்தை எடுத்தால் கிழே வைக்கமுடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருந்தது . புத்தகம் அந்த விசாரத்தை விரிவாக அது நடந்த விதத்தை மையமாக கொண்டிருக்கும் என்று நினைத்ததற்கு மாறாக இருந்தது . முதல் 10-15 பக்கங்களிலேயே அந்த நிகழ்வை ஒரு கோட்டோவியமாய் காட்டிவிடுகிறார் எழுத்தாளர் . அதற்கு பிறகான பகுதிகளில் அந்த நிகழ்விற்கான காரணங்கள் என்னவாக இருந்திருக்கும் ! கேரள சமூகத்தில் அந்த நிகழ்வு நிகழ்த்தி சென்ற, நிகழ்த்திக்கொண்டிருக்கும் அதிர்வுகளைப்பற்றி விளக்குகிறார் .
கேரளாவில் 1900 காலகட்டத்தில் நம்பூதிரி இனத்தில் பெண்களுக்கு கடும் வரைமுறைகளை வகுத்து ஒடுக்கி வைத்திருக்கின்றனர் . தலை மகனுக்கு மட்டுமே சொத்துரிமையும் , திருமணம் செய்துகொள்ளும் உரிமையும் உண்டு . பெண்களுக்கு இளம் வயதில் திருமணம் & விதவைகளுக்கு மறுமண மறுப்பு என்று இறுதிவரை இருளும் ஈரமும் நிறைந்த வீட்டில் கழித்து இறப்பதை தவிற வேறு வழி இல்லை ,அவர்கள் அந்தர்ஜனம் என்றே விளிக்கப்படுகின்றனர் . அந்த சமூகத்தில் கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே உடல் தேவைக்கான நிர்பந்தமும் அது சார்ந்த நிகழ்வுகளும் நிலவுகிறது. அதை கட்டுப்படுத்த ஒரு நம்பூதிரிகள் குழுவை நிர்மாணித்து கடும் தண்டனைகள் வழங்கப்படுகின்றது .
பாலியல் புகார்களுக்கு உட்படுத்தப்படும் பெண்கள் சாதி விலக்கு செய்யப்பட்டு , தனி அறையில் உணவு நீரின்றி கொடுமைப்படுத்தப்படுகின்றனர் . மூடிய அறையின் கதவிற்கு வெளியே இருந்து அந்த நம்பூதிரிகள் குழு நிகழ்த்தும் விசாரணையையே ஸ்மார்த்தவிசாரம் என்று குறிப்பிடுகின்றனர் .மாதக்கணக்கில் நிகழ்ந்த ஸ்மார்த்தவிசாரங்களைக்கூட குறிப்பிடுகிறார்கள் . அந்த விசாரணையில் அந்தர்ஜனங்கள் தங்களை நிரூபித்ததாக வரலாறே இல்லை , எப்படி இருந்தாலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவைக்கப்படுகிறார்கள் .இறுதியில் அந்த பெண் இறந்ததாகக் கொண்டு அவருக்கு இறுதிக்காரியம் செய்வதோடு. அவரை வெளியே விற்று விடும் கொடும்பழக்கமும் இருந்திருக்கிறது . அந்தப்பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட ஆண்களுக்கு சாதிபிரதிஸ்டம் (சாதி விலக்கு )முதல் மரணதண்டனை வரை கொடுக்கப்படுகிறது . தண்டனைக்கு உட்பட்ட ஆண்கள் தங்களை சுசீந்திரம் கோவிலில் கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு நிரூபிக்க ஒரு வாய்ப்பும் வழங்கப்படுகிறது . இதுதான் அதுவரை நடந்து வந்த நடைமுறை . தன்னை கைபிடித்து இழுத்த ஒரு முதிய நம்பூதிரிமேல் பிராது கொடுத்த ஒரு சிறுமிமேல் குற்றம் சுமத்தி குற்றத்தை ஏற்கவைத்து அந்த சிறுமியை விற்ற கதையை வேறொரு புத்தகத்தில் (முன்சுவடுகள் )ஜெமோ குறிப்பிடுகிறார் . அந்த கட்டமைப்பின் கொடூரத்தை விளக்க அந்த ஒரு கதையே போதுமானதாக இருந்தது .
அப்படி யாருமே எதிர் குரல் எழுப்பமுடியாமல் இருக்கும் அதர்மக்கட்டுமானத்தை ஒரு பெண் உடைக்கிறாள் . எந்த உடலை அவர்கள் பலவீனமாக உருவகப்படுத்தினார்களோ அதே உடலைக்கொண்டு அவர்களுக்கெதிராக கலகம் செய்கிறாள் . தாத்ரிக்குட்டி ஸ்மார்த்த விசாரத்திற்கு உட்படுத்தப்படுகிறாள் . நம்பூதிரிகள் கேட்கும் கேள்விகளுக்கு கவனமாக பதிலுரைக்கிறாள் . அவள் 63 பேர் மேல் குற்றம் சுமத்துகிறாள் , அதை நிறுவ அவள் சேகரித்து வைத்திருந்த அத்தாட்சிகள் , அது மிக சாதூர்யமாக திட்டமிட்டு நிகழ்த்தியதாக காட்டுகிறது .63 பெயரை சொன்னவள் 64 வது பெயரை சொன்னால் தண்டணைக்கொடுக்க ஆள் இருக்காது என (அது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் யாரோ ஒரு பெரிய ஆள் ) . அரண்டுப்போன நம்பூதிரிக்குழு அத்தோடு விசாரத்தை முடித்துக்கொண்டு தண்டனைகளை பிறப்பிக்கின்றனர் .
பின்னர் அவள் சாதி பிரஷ்டம் செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள் . அந்த 63 பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர் .
இந்த புத்தகத்தின் ஆசிரியர் இந்த நிகழ்வு நிகழ்ந்த களத்திற்கு பயணிக்கிறார் . அந்த நிகழ்வைப்பற்றி கேள்விப்பட்டவர்களை சந்திக்கிறார் . அந்த நிகழ்வின் உண்மைத்தன்மைக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்ல முனைகிறார் .
எவ்வளவு முயன்றும் தாத்ரிக்குட்டியின் ஆளுமையை நம்மால் உருவகப்படுத்த முடியவில்லை . ஒரு விசித்திரமான பெண்ணாக ,பல இடங்களில் ஒரு யட்சி போன்று தோன்றுகிறாள் .நல்ல கல்விவியும் கலா ரசனையும் மிகுந்தவள் . கதகளியை மிகவும் விரும்பி இருக்கிறாள் . அந்த 63 பேரில் ஒருவரைப்பற்றிய விவரணைகள் மட்டுமே புத்தகத்தில் அதிகம் கிடைக்கிறது . அவர் கத்தக்களி வித்தகர் காவுங்கல் சங்கர பணிக்கர் . அவருடனான உறவை காதலாகவே புத்தகம் முன்னிறுத்திக்கிறது . அவளுக்கு கதக்களி மேலிருந்த பிரேமை அதில் அசைக்கமுடியாத ஆளுமையாய் இருந்த சங்கர பணிக்கர் மேல் படர்கிறது .ஓரிடத்தில் கீசகன் களி கட்டிய பணிக்கரை கீசகன் வேடத்திலேயே கூட வேண்டும் என்று பணிக்கிறாள் (என்ன ரசனை !)
ஸ்மார்த்த விசாரத்திற்குப்பிறகு சாதி விளக்கப்பட்டதால் எங்கும் வேஷமும் கட்டமுடியாமல் போகிறது . அது மரணத்தை விட பெரிய தண்டனையாய் உணர்கிறார் பணிக்கர் . இந்த நம்பூதிரிகளின் சட்டம் செல்லாத திருவாங்கூர் சமஸ்தானத்தில் சிறு குழுவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார் . இருந்தும் தன் மண்ணில் தன் மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் அடிமனதில் இருக்கிறது . ஓரு கட்டத்தில் மீண்டும் ஊர் திரும்புகிறார் , ஒரு சிறு குழுவை நிர்மாணிக்கிறார் . அறுவடை நடந்த கழனியை திருத்தி எளிய மக்களின் முன் கதகளியை காட்டுகிறார் . அதுவரை மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே பரிமாறப்பட்ட கலை இறங்கி அவர்களிடம் வர அதை அவர்கள் அரவணைத்துக்கொள்கிறார்கள் . எல்லா உதவிகளையும் செய்கிறார்கள் . தன் பார்வையாளர்கள் கதகளி பற்றிய பிரக்ஞை இல்லாதவர்கள் என்பதை உணர்ந்திருந்த பணிக்கர் , சில ஜெனரஞ்சக விஷயங்களை கலந்து நகாசு செய்கிறார் . கதகளியில் மிகுந்த ஆர்வம் மிகுந்த நம்பூதிரிகள் தலையில் முக்காடு போட்டுகொண்டு கழனி நோக்கி வருகின்றனர் . ஒரு கட்டத்தில் சில இடங்களில் நிகழ்ச்சி நிகழ்த்த அனுமதிக்கின்றனர் . முத்தாய்ப்பாக ராஜரீக விஷயமாக அந்த பகுதியை கடந்து செல்லும் கொச்சி மன்னர் முன் களி கட்ட வாய்ப்பு கிடைக்கிறது . தான் காத்திருந்தது இதற்குத்தான் என்று ஆவலுடன் தயாராகிறார் பணிக்கர் .
கடைசி நேரத்தில் ஒரு நம்பூதிரிகள் குழு உள்ளே புகுந்து அனைத்தையும் நிறுத்துகிறது . சிலர் பணிக்கரின் அலங்காரத்தை கலைத்து விடுகின்றனர் . எதற்கும் கலங்காத பணிக்கர் அன்று உடைந்து கதறுகிறார் . நிகழ்சியை ஏற்பாடு செய்தவர் இன்று நடக்காவிடினும் நாளை நடக்கும் என்று வாக்கு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் . வேறொரு இடத்தில அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் . கொச்சி மகாராஜா ஓணக்கொடி கொடுக்கிறார் . எந்த ஆட்சி அதிகாரம் தன்னை விலக்கியதோ அதனிடமிருந்து அந்த விலக்கிற்கு விலக்கு பெறுகிறார். அவரின் கலை மூலம் .
மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே என்றிருந்த கலையை எல்லோரிடமும் எடுத்து செல்லவேண்டிய ஒரு நிர்பந்தத்தை பணிக்கருக்கு ஏற்படுத்தியது தாத்ரிகுட்டியின் ஸ்மர்த்த விசாரம் . இதுபோன்ற பல வீச்சுகளை சமூகத்தில் நிகழ்த்தியது . அந்த நிகழ்வுக்கு பின்தான் சமூகத்திற்கு அந்தர்ஜனங்களின் வாழ்க்கை பற்றிய பிரக்ஞை வந்தது . பார்வதி நென்மணி மங்களம் , ஆர்யா பள்ளம் , தேவகி நரிக்கேடி போன்றோர் அந்தர் ஜனங்களை மீட்க அவர்களுக்கான அடுத்தக்கட்ட முன்னெடுப்புகளை எடுத்தனர் .
வரிசையாய் அடுக்கிவைக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளை , கர்ம சிரத்தையோடு அடுக்கி கடைசியாக ஒரு சீட்டை சுண்ட அனைத்தும் ஒத்திசைவாய் சரிவதை கண்டதுண்டா ! அதே போன்ற பிரமையை கொடுத்தது. அந்த முதல் விசை தாத்ரிக்குட்டி சுண்டியது அது சமூகத்தில் வெளிப்படுத்திய வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் வீச்சு ,சரியும் சீட்டுகளை நினைவு படுத்துகிறது .தாத்ரிக்குட்டிக்கு முன் அனேக அந்தர்ஜனங்கள் அடைபட்டு கிடந்திருக்கின்றனர் , அவர்களால் முடியாதது எப்படி தாத்ரிக்குட்டியால் முடிந்தது ? . அவர்களுக்கு கிடைக்காத பெரும் ஆயுதம் ஒன்று தாத்ரிக்கு கிடைத்தது . அது அவர் பெற்ற கல்வி .
தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்
சந்தியா பதிப்பகம் / 70 ரூ
ஆலங்கோடு லீலா கிருஷ்ணன்
தமிழில் : யூமா வாசுகி

No comments:
Post a Comment